யாழ் வண்ணார்பண்ணையில் வாள்வெட்டுக் குழுவின் அட்டகாசம்! வீட்டுக்கு பெற்றோல் குண்டு வீச்சு!

வாள்கள், கம்பிகளுடன் மூன்று மோட்டார் சைக்ளில் வந்த வாள்வெட்டுக் குழு ஒன்று வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் இருந்தவர்களை அச்சுறுத்திவிட்டு வீட்டின் கதவு, ஐன்னல் கண்ணாடிகளை அடித்து நொருக்கி பெற்றோல்க் குண்டை வீசி வீட்டைக் கொழுத்தி விட்டு தப்பிச் சென்றுள்ளனர். 

இச்சம்பவமானது தாமரை வீதி, வண்ணார் பண்ணையில் நேற்று (19) இரவு 8.30 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருவதாவது, மேற்படி முகவரியில் உள்ள வீடு ஒன்றுக்கு மூன்று மோட்டார் சைக்கிளில் சுமார் 6 முதல் எட்டு பேர் வரையான வாள்வெட்டுக் குழுவினர் சென்றுள்ளனர்.

இதன் போது வீட்டில் பெற்றோரும் பிள்ளைகளும் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

ஆயினும் தமது வீட்டின் கதவை உடைத்துக் கொண்டு வீட்டிற்குள் ஒரு குழுவினர் ஆயுதங்களுடன் வீட்டை அடித்து நொருக்கியவாறு வருவதை அவதானித்து அவர்கள் கூக்குரலிட்டுக் கத்தியுள்ளனர். 

அவ்வாறு வீட்டுக்கார்ர்கள் கத்திய போதிலும் வீட்டிற்குள் நுழைந்த வாள்வெட்டுக் குழுவினர் தம்மிடம் இருந்த வாள்கள் இரும்பு கம்பிகள் கோடாரிகளால் வீட்டின் கதவு, ஐன்னல், தொலைக்காட்சி பெட்டிகள் மற்றும் அங்கிருந்த ஏனைய பொருட்கள் பலவற்றையும் அடித்து நொருக்கியுள்ளனர்.

இதன்போது வீட்டில் இருந்த பெண்மணி பொருட்கள் எதனையும் உடைக்க வேண்டாம் என கெஞ்சிக் கேட்டிருந்த போதிலும் அங்கிருந்த அனைத்துப் பொருட்களையும் தொடர்ச்சியாக அடித்து நொருக்கி உள்ளனர்.

இவ்வாறு அனைத்தையும் அடித்து நொருக்கி விட்டு வீட்டிற்குள் பெற்றோல் குண்டையும் வீசியுள்ளனர். இதனை அடுத்து வீடு பற்றி எரிய அயலவர்கள் ஓடி வர வாள்வெட்டுக் குழுவினர் தப்பிச் சென்றுள்ளனர்.

இதன் பின்னர் வாள்வெட்டு குழுவின் இத்தகைய சம்பவம் தொடர்பாக யாழ். பொலிஸாருக்கு தகவல் கொடுக்கப்பட்டதை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments