இலங்கை தொடர்ந்தும் முதலிடத்தில்!


உலக நாடுகளில் மிகவும் மோசமான சித்திரவதைகளும், துன்புறுத்தல்களும் இடம்பெறும் நாடுகளின் பட்டியலில் இலங்கை மீண்டும் முதல் இடத்தைப் பிடித்துள்ளதாக, சித்திரவதைகளில் இருந்து விடுவித்துக்கொள்ளும் சர்வதேச அமைப்பு (Freedom from Torture) வெளியிட்ட ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அந்த அறிக்கைக்கு அமைய இலங்கை ஏழாவது ஆண்டாகவும் (2017ஆம் ஆண்டு புள்ளிவிபரங்கள்) இந்தப் பட்டியலில் முன்னணியில் திகழ்கின்றது.




தேசிய அரசாங்கம் ஆட்சி பீடம் ஏறி மூன்று வருடங்கள் பூர்த்தியாகின்ற போதிலும் இன்னமும் இலங்கையில் மிகவும் கொடூரமான சித்திரவதைகள், ஆட்கடத்தல்கள், பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்ந்து இடம்பெறுவதாக பிரித்தானியாவைத் தளமாகக் கொண்டு இயங்கும் அந்த அமைப்பின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அந்த அமைப்பு 96 நாடுகளில் சித்திரவதைகளுக்கு உள்ளானவர்களுக்கு உதவி வரும் நிலையிலேயே சித்திரவதைகள் தொடர்பான பட்டியலை வெளியிட்டிருக்கின்றது.

இலங்கையில் கடந்த 2017 ஆம் ஆண்டு சித்திரவதைகளுக்கு உள்ளான 184 பேருக்குத் தாம் உதவி செய்துள்ளதாக தெரிவித்துள்ள குறித்த அமைப்பு, இதற்கமைய உலக நாடுகளில் அதிகளவிலானோர் சித்திரவதைக்கு உள்ளான நாடுகளின் பட்டியலை வெளியிட்டுள்ளது.




கடந்த 2016ஆம் ஆண்டு ஜுலை மாதம் இலங்கைக்கு விஜயம் செய்திருந்த ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்பு அறிக்கையாளர் பென் எமர்சன் தனது விஜயத்தின் இறுதியில் இலங்கையில் தொடர்ந்தும் மோசமான சித்திரவதைகள் இடம்பெறுவதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியிருந்த விடயத்தையும் அந்த அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, சித்திரவதைக்குள்ளாவதை தடுப்பதற்காக, நியாயமான பொறுப்புக்கூறல் நடவடிக்கைகளை எடுத்தல் அல்லது பாதுகாப்புப் படையை மறுசீரமைப்பதற்கு அரசாங்கம் எவ்வித நடவடிக்கைகையும் எடுக்கவில்லை எனவும் அந்த அமைப்பின் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments