காவல்துறைக்கு கால அவகாசம் தேவையாம்?

வடமாகாண சபை உறுப்பினர்களான து.ரவிகரன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் மீதான வழக்கு விசாரணையை, எதிர்வரும் ஜனவரி மாதம் 7ஆம் திகதிக்கு ஒத்திவைத்து, முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றம் நேற்று (16) உத்தரவிட்டது.

கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி, முல்லைத்தீவு - வட்டுவாகல் பகுதியில், மக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணியை அபகரிக்கச் சென்ற நில அளவீட்டாளர்களை வழிமறித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில், து.ரவிகரன் மற்றும் சிவாஜிலிங்கம் ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, மேற்படி ஆர்ப்பாட்டத்தில் அரச சொத்துகளைச் சேதம் விளைவித்தக் குற்றச்சாட்டில், வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரனை கைதுசெய்த முல்லைத்தீவு பொலிஸார், அவருக்கு எதிராக, வழக்கு தாக்கல் செய்தனர்.

இதன்போது, இந்த வழக்கு விசாரணை, பெப்ரவரி 28ஆம் திகதி எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அவருக்கு பிணை வழங்கப்பட்டதுடன், ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் நீதிமன்றத்துக்குச் சென்று கையெழுத்திட வேண்டும் எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதேவேளை, வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் முன் பிணைகோரி, சட்டத்தரணி ஊடாக பிணையில் வெளிவந்தார்.

இந்நிலையில், இவ்விருவர் மீதான வழக்கு விசாரணை, இன்று (16) முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, இந்தச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு பொலிஸார் காலம் கோரியதற்கமைவாக, வழக்கு விசாரணையை ஜனவரி மாதம் ஒத்திவைத்து உத்தரவிடப்பட்டது.

No comments