சம்பூர் படுகொலைக்கான நீதியும், ஆற்றுப்படுத்லை எதிர்கொண்ட சமூகமும்

அலை ஆடும் கடலோரம் நீர் சுமந்த தென்றலும் ஊர் நனைத்து வனம் புகும் காரும் இங்கே எங்கள் தலை துவட்டி செல்லும். காடும் மெல்ல பசுமை தந்திடும் பல பல அதிசயங்கள் நிறைந்த பூமி சம்பூரணம்.

இயற்கை துறைமுக மின்னொளியில் அலை எழுந்து சம்பூர் கரையோரத்தை மெல்ல முத்தமிடும் அழகை காணின் கொள்ளை போகாத உளம் உண்டோ!கடல் கரைபுரண்டு ஆர்பரித்தாலும் அங்காங்கே எழுந்திருக்கும் மலையன்னையால் வேகமும் தணிந்து அலையாத்தி காடுகளால்  அலையும் குளிர்ந்து பாதுகாப்பரண் கொண்ட மகத்தான ஊர் சம்பூர்.

மூதூர் கிழக்கே சகல வளமுங் குன்றாத கிராமம் சம்பூர். இங்கு கடலோடும் மக்களும், விவசாயம் செய்யும் மானிடர்களும் கால்நடை வளர்ப்போரும் என தனித்தமிழ் மக்கள் வாழும் இக்கிராமம் பல தமிழ்க்கிராம மக்களின் பாதுகாப்பரணாகவும் திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. இங்கு அறுபதிற்கும் மேற்பட்ட குளங்களோடு தொடர் காடுகளையும் கொண்டதாக அமைந்தமையினால், மக்கள் அரச பயங்கரவாத செயல்பாடுகளிலிருந்து தம்மை பாதுகாத்து கொண்டனர்.

1990 காலப்பகுதியில் தமிழர் வாழும் பகுதிகளில் சிறப்பாக கிழப்பகுதியில் அரச பயங்கரவாதமும் முஸ்லிம் தீவிரவாதமும் அப்பாவி தமிழர்களை மிக மிக மோசமாக படுகொலை செய்தமை குறிப்பிடத்தக்கது.

திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை என நீண்டு கொண்டே சென்றது தமிழினப்படுகொலைகள். இதற்கான காரணங்களையோ, நீதியையோ எந்த அரசும் சரி, மனிதவுரிமை அமைப்புக்களும் சரி வழங்க முன்வரவில்லை என்பது தமிழருக்கே கிடைத்த சாபம் என்றால் மாற்றுக்கருத்தில்லை.

அரச இயந்திர பயங்கரவாதமும் முஸ்லிம் தீவிரவாதமும் இணைந்து நடத்திய படுகொலையில் மிக முக்கியமான படுகொலை 07.07.1990 - 09.07.1990 எனும் மூன்று நாளில் ஏறத்தாழ நூற்றைம்பதிற்கும் மேற்பட்ட அப்பாவித் தமிழர்கள் சம்பூர் மண்ணில் படுகொலை செய்யப்பட்டனர்.

இந்தப்படுகொலையானது திட்டமிடப்பட்டு நிகழ்ததப்பட்டதோடு, ஒரு பழிவாங்கும் படலமாகவும் அமைந்தது எனலாம். அதாவது மூதூர் எனும் சிறுநகரை தமிழீழ இராணுவத்தினர் கைப்பற்றி தமது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்திருந்தனர். இதை முறியடிக்க பாரிய நடவடிக்கை ஒன்றை சிங்கள அரசு மேற்கொண்ட போது அந்நகர்வை தமிழீழ விடுதலைப் புலிகள் முறியடித்து, அனைத்து படையினரையும் வெற்றி கொண்டனர். இதற்கு பழி தீர்க்கவே சிங்கள அரசு தன் முழுப்பலத்தையும் பயன்படுத்தி பாரிய படைநகர்வை சம்பூரை நோக்கி நகர்த்தி அப்பாவி தமிழர்களை படுகொலை செய்தது.

சம்பூர் படுகொலையின் போது பாடசாலை ஆசிரியர், பன்னிரண்டு வயது மாணவன் உட்பட பல மாணவர்கள், சேர்மன் ,பொலிஸ் உத்தியோகத்தர், பாலூட்டும் தாய் என பலரும் படுகொலை செய்யப்பட்டனர்.

சிங்கள அரசின் தமிழின அழிப்பானது தற்போதும் தொடர்நதவண்ணமே இருப்பதே பெருங் கொடுமை எனலாம். சம்பூரில் படுகொலையான மக்களை நினைவு கூர்ந்து ஒர் நடுகல் நட்டு வழிபடக்கூட அனுமதி மறுக்கப்படுவதே மிக மிக வேனை தரும் விடயமாகும்.

சம்பூர் படுகொலை போல் எத்தனையோ அப்பாவி தமிழர் படுகொலைகள் மூடி மறைக்கப்பட்டவண்ணம் உள்ளன. இவற்றை வெளிக்கொணர்ந்து தகுந்த நீதியை பெற்றுக் கொடுக்கவேண்டியது ஊடகங்களின் தலையாய கடமையாகும்.

எனவே படிகொலையான மக்களுக்கான நீதி கிடைக்கவும், அவர்களை நினைத்து நடுகல் நட்டு வழிபடவும் சுமந்திர காற்றை சுவாசிக்கவும் உலக மனிதாபிமான அரசுகள் உதவ்வேண்டும் என்ற மிகப்பெரிய ஆற்றுப்படுத்தை எதிர்தோக்கியவாறு இன்றைய தமிழர் சமூகம் காத்திருக்கின்றது என்பதே மறுக்கப்படாத உண்மையாகும்.

ஞா. ரேணுகாசன்

No comments