காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் - வெறும் விசாரணை மட்டும்தான் ??


காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினை இந்த நாட்டில் உள்ள நீண்டகால பிரச்சினை இதற்கு உடனடியாக தீர்வினை பெற்றுக் கொடுப்பேன். என பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை. ஆனாலும் ஆழமான விசாரணைகளை நடத்துவோம். மேற்கண்டவாறு காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் கூறியுள்ளார்.

மேற்படி அலுவலகத்தின் அமர்வு இன்று யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்விலேயே சாலிய பீரிஸ் மேற்கண்டவாறு கூறியுள்ளார். அங்கு மேலும் அவர் கூறுகையில்,

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயம் மிகவும் பாரதூரமான விடயமாக இருந்து வருகின்றது.  இந்த விடயத்தில் உடனடியாக தீர்வினை பெற்றுக் கொடுப்போம் எனவும்,  காணாமல் ஆக்கப்பட்டவர்களை உடனடியாக தேடி தருவோம். எனவும் பொய்யான வாக்குறுதிகளை கூறுவதற்கு நாங்கள் தயாராக இல்லை. ஆனால் இதுவரை இடம்பெற்ற ஆணைக்குழுக்களை போன்று அல்லாமல் நாம் இந்த விடயத்தில் ஆழமான விசாரணைகளை நடாத்துவோம். மேலும் பாதிக்கப்பட்ட மக்களிடம் இரகசியமான விசாரணைகளையும் நடாத்துவோம்.

அதன்படையில் நியானமான தீர்வு ஒன்றுக்கான பரிந்துரைகளை செய்வோம். மேலும் இந்த விடயத்தில் சாட்சிகளுக்கு பூரணமான பாதுகாப்பை வழங்குவதற்கு தீர்மானித்திருக்கின்றோம். மேலும் பாதிக்கப்பட்டுள்ள மக்க ளுக்கு ஆற்றுப்படுத்தல் மற்றும் வாழ்வாதர உதவி வழங்கல் போன்ற விடயங்களை கொடுப்பதற்கும்  எமது அலுவலகத்தின் கீழ் நடைமுறை உள்ளது. மேலும் மக்கள் இவ்வாறான துன்பங்களை மீள அனுபவிக்காத வகையில் எமது பரிந்துரைகள் அமையும். இதனை மக்கள் நம்பவேண்டும்.

அதேபோல் இராணுவத்திற்கு எதிரான குற்றச்சாட் டுக்கள் தொடர்பில் தடைகள், அழுத்தங்கள், வரலாம். அதனை நாங்கள் எதிர்கொண்டு சமாளிப்பதற்கு தயாராக இருக்கின்றோம். காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளில் பெரும்பாலானவர்கள் நஷ்டஈடு பெறுவதற்கோ, அல்லது வாழ்வாதார உதவிகளை பெறுவதற்கோ விருப்பமற்றவர்களாக இருக்கிறார்கள். அதனை நாங்கள் அறிவோம். அவர்கள் காணாமல் ஆக்கப்பட்ட தங்களுடைய உறவுகளையே கேட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.

கடந்த கால அனுபவங்களின் அடிப்படையில் எமது அலுவலகம் மீது மக்களுக்கு நம்பிக்கையற்ற தன்மை காணப்படுகின்றது என்றார்.

No comments