14 ஆயிரம் இராணுவமே யாழில் உள்ளதாம்


யாழ்ப்பாணக் குடாநாட்டில், சுமார் 14,000 இராணுவத்தினரே நிலைகொண்டிருப்பதாக யாழ். படைத்தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான படையினர் நிலைகொண்டிருப்பதாக அரசியல்வாதிகளால் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படுகின்ற நிலையில், அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

“யாழ். குடாநாட்டில் தற்போது, 51, 52, 55 என மூன்று பிரிவுகள் நிலை கொண்டுள்ளன. மொத்தமாக 14,000 படையினர் தற்போது எனது கட்டுப்பாட்டின் கீழ் உள்ளனர். இந்த எண்ணிக்கையை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் பாதுகாப்புப் பணிகளையுத் தாண்டி அங்கு வாழும் தமிழ் மக்களுக்கு பல்வேறு சேவைகளை வழங்கி வருகின்றனர்.

"அவர்கள் அவசர தீயணைப்புப் பணிகள், கோயில் உற்சவங்கள் உள்ளிட்ட பொது நிகழ்வுகளில் ஏற்பாடுகளை மேற்கொள்ளல், சிரமதான பணிகளை மேற்கொள்ளுதல், வீடுகளை அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2017 மார்ச் மாதம் யாழ். படைகளின் கட்டளைத் தளபதியாக பொறுப்பேற்ற பின்னர், யாழ். குடாநாட்டில் இருந்து படையினரின் எண்ணிக்கை குறைக்கப்படவில்லை. 2009ஆம் ஆண்டு போர் உச்சக்கட்டத்தில் இருந்த போது, யாழ் குடாநாட்டில் சுமார் 45,000 படையினர் நிலைகொண்டிருந்தனர். எனினும் போர் முடிந்து 18 மாதங்களுக்குப் பின்னர், 2010 ஒக்டோபரில் யாழ்ப்பாணத்தில் இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைக்கும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டது. படிப்படியாக இராணுவத்தினரின் எண்ணிக்கை குறைக்கப்பட்டு வந்தது.

2014 ஜனவரி மாதம், மேஜர் ஜெனரல் உதய பெரேரா, யாழ். படைகளின் தளபதியாக பொறுப்பேற்றபோது, குடாநாட்டில் படையினரின் எண்ணிக்கை 14,600 ஆக குறைக்கப்பட்டிருந்தது. 2015 ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னதாகவே, குடாநாட்டில் படையினரின் எண்ணிக்கை 14,000ஆக குறைக்கப்பட்டுவிட்டது.” என அவர் தெரிவித்துள்ளார்.

No comments