மத்தலவில் மௌனமாய் காய் நகர்த்தும் இந்தியா


மத்தல அனைத்துலக விமான நிலையத்தின் 70 வீத பங்குகளை இந்தியா பெற்றுக் கொள்ளவுள்ளதாக சிறிலங்கா அரசாங்கத் தரப்பில் செய்திகள் வெளியிடப்பட்டுள்ள போதிலும், இந்திய அரசாங்கம் இதுபற்றி கருத்து வெளியிடுவதை தவிர்த்து வருகிறது.

கடந்த வாரம் இந்திய அதிகாரிகள் குழுவொன்று கொழும்பு வந்து இரண்டு நாட்கள் பேச்சுக்களை நடத்தியிருந்தது.

இதன்போது மத்தல விமான நிலையத்தின் 70 வீத பங்குகளை, இந்தியாவும், 30 வீத பங்குகளை சிறிலங்காவும் பகிர்ந்து கொள்ள இணக்கம் காணப்பட்டுள்ளது.

40 ஆண்டுகளுக்கு குத்தகை அடிப்படையில் இந்த உரிமை உடன்பாடு செய்து கொள்ளப்படவுள்ளதாக, சிறிலங்காவின் அமைச்சர் நிமால் சிறிபால டி சில்வா தெரிவித்திருந்தார்.

70 வீத பங்குகளுக்காக 225 மில்லியன் டொலர் நிதியை இந்தியா வழங்கும் என்றும் தகவல்கள் வெளியாகியிருந்தன.

இந்த இணக்கப்பாடு தொடர்பாக இந்தியா தரப்பில் இதுவரை அதிகாரபூர்வ தகவல்கள் எதுவும் வெளியிடப்படவில்லை.

இதுபற்றி எந்தக் கருத்தையும் வெளியிட முடியாது என்று இந்திய விமான நிலையங்கள் அதிகார சபையின் பேச்சாளர் ஜேபி சிங், ஹிந்துஸ்தான் ரைம்சிடம் கூறியுள்ளார்.

அதேவேளை, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்தியாவின் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சுக்களின் பேச்சாளர்களைத் தொடர்பு கொள்ள முடியாதிருப்பதாக ஹிந்துஸ்தான் ரைம்ஸ் தெரிவித்துள்ளது.

No comments