அடுத்தநாள் தான் தம்பி தெரிஞ்சது. அதில நான் பெத்த குஞ்சுவும் ஒண்டெண்டு!

1988ம் ஆண்டுக் காலப்பகுதி…. வினோத்தின் வீட்டை இந்தியப் படைகள் அடிக்கடி சுற்றி வளைத்தனர். அவனைத் தேடி இந்திய சிப்பாய்கள் அங்கு பாய்வதும் வழமை யாகிவிட்டது. அந்த ஆபத்தான பொழுதுகளில், வீட்டுக் கூரைக்குள் ஏற்றி பெற்றோரால் அவன் மறைத்துக் காக்கப்படுவான்.
மேலேயிருந்து “சயனைட்” குப்பியைப் பற்களுக்கிடையில் செருகிக்கொண்டு எதனையும் எதிர்பார்த்து நொடிகளை எண்ணிக்கொண்டிருப்பான் வினோத்.
வினோத்தின் அக்கா சொல்கிறாள் ….
“அந்த நேரத்தில் சின்னச் சின்ன ‘கானு’களுக்குள்ள (கொள்கலன்) என்னவோ கொண்டு வந்து, வீட்டு மூலையளுக்குள்ள வைப்பான்.
என்னடா இது என்று கேட்டால், அதுக்குள்ளே தண்ணீர் அக்கா… என்றுவிட்டு போயிடுவான்.
அவன் போனதுக்குப் பிறகு தூக்கிப் பார்த்தா, அது தண்ணீர் இல்லை. இறுக்கமாக, பாரமாகக் கணக்கும்…. எங்களுக்கும் அது என்னென்று தெரியவில்லை.
யாரும் எதிர்பாராத ஓர் அதிகாலைப் பொழுதில் திடீரென வீட்டிற்குள் நூலைந்த இந்தியர்களிடம், வினோத் சர்ந்தப்பவசமாகச் சிக்கிக்கொள்ள நேர்ந்தது. வீட்டில் எல்லோரும் பார்த்து நிற்க துவைத்து எடுத்துவிட்டு, அவர்கள் அவனை இழுத்துக் கொண்டு போய்விட்டார்கள்.
வினோத்தின் அப்பா சொல்கிறார் ….
“அவனொரு பயங்கரச் சுழியனடா தம்பி…. அவனை இந்தியன் புடிச்சுக் கொண்டுபோய் காம்பில் வைத்திருக்கேக்க ஒரு நாள்…. வீட்டு விராந்தையில் கிடந்த வாங்கில படுத்திருந்தான். தற்செயலா லேனைப்பார்த்தேன், சுவரோட சேர்த்துப் பூட்டியிருக்கிற லைற்றின்ர கோப்பைக்கு மேலால , சாதுவா , கறுப்பா என்னவோ தெரிஞ்சுது. கதிரையைக் கொண்டுபோய் வைத்திட்டு ஏறி எடுத்தனடா மோனை, அது ஒரு கிறனைட். அப்படியே நிண்டு எட்டிப் பாத்தன், பக்கத்த பக்கத்தை இருக்குற நாலு லைற்றுக்கையும் கிறனைட் வைத்திட்டு போயிருக்கிறான்.
இயல்பாகவே மற்றவர்களோடு நெருங்கிப் பழகி, அவர்களை மகிழ்வில் ஆழ்த்தக்கூடிய சுபாவம் கொண்டிருந்த வினோத்தின் அப்பா தன் பிள்ளையைப் பற்றி பெருமையாகச் சொல்லிக் கொண்டிருந்தார்.
Major Valavan
இந்தியனிடம் பிடிபட்டு காங்கேசன்துறை காம்பில இருக்கேக்க, நாங்கள் அவனைப் பார்க்கப் போறனாங்கள். அங்கபோற நேரமெல்லாம், வீட்டில தான் வைத்துவிட்டுப்போன சாமான்களைப் பற்றித்தான் தம்பி சொல்லுவான்…. எங்களைப் பற்றி இல்லை. அதுகளைப் பத்திரமா எடுத்துப் பெடியளிட்டை குடுத்து விடோணும் என்கிறதிலதான் அவன்ர கவனமெல்லாம் இருக்கும்.
இந்தியப்படை இங்கிருந்து வெளியேற்றப்பட்ட போது, ஏனையவர்களுடன் வினோத்தும் விடுவிக்கப்பட்டான்.
‘தம்பி வந்திட்டான்’ என எல்லோரும் மகிழ்ட்சியடைந்திருந்த போது, 22ம் நாள் வினோத் திரும்பவும் காணாமல் போய்விட்டான். அதன் பின் அவன் இடைக்கிடை வீட்டுக்கு வந்து போவான்.
திரும்பவும் சிங்களப் படையினருடன் சண்டை ஆரம்பித்து சில நாட்களே நகர்ந்திருந்தன….
ஒரு நாள் வினோத் வீட்டிற்கு வந்தான்.
வரிப்புலிச் சீருடையில் “மிலிற்றறி” சப்பாத்துப் போட்டு ஒரு கையில் துப்பாக்கியுடன், மறுகையில் புகைப்படக் கருவி ஒன்றையும் கொண்டு வந்தான். வீடில் எல்லோருடனும் சேர்ந்து படம் எடுத்தான். அக்காமாரைக் கட்டிப்பிடித்தபடி…. அக்காமாரின் குழந்தைகளைத் தோளில் வைத்தபடி … ஆச்சியோடு நின்று… எல்லாவிதமாகவும் படமெடுத்தான்.
‘என்னடா புதினமாக இன்றைக்கு எல்லோரையும் படம் எடுக்கிறாய்…?’ அக்கா கேட்டாள்.
“ஒன்றுமில்லை அக்கா …. நானொரு வேலையாகத் தூர இடத்திற்குப் போறான்… திரும்பி வரமாட்டன்…” சிரித்துக்கொண்டு சொன்னான்.
அண்ணனின் குழந்தையைத் தூக்கி வைத்துக் கொண்டு,
“உன்ர சித்தப்பா இனி வரமாட்டான்…. இறுக்கிக் கொஞ்சிவிடு…. என்று சொல்லிக் கொஞ்சினான்.”
‘… எங்களுக்கு அது அப்போது அவ்வளவு விளங்கேல்லை..’
வல்வெட்டித்துறையில் கடற்கரையோரமாக அவர்களுடைய வீடு இருந்தது. அங்கு பீரங்கிக் கப்பல்களின் தொடர்சியான தாக்குதல்கள் நிகழும். இதன் காரணமாக கொடிகாமம் சென்று அங்குள்ள உறவினர் வீட்டில் தங்கியிருந்த அம்மாவையும், அப்பாவையும் வினோத் சென்று பார்த்தான்.
கட்டியணைத்துக் கொண்டு படம் எடுத்த்தான்.
அம்மா கேட்டபோது அக்காவுக்குச் சொன்ன அதே காரணத்தை இங்கேயும் சொன்னான். அவர்களாலும் வித்தியாசமாக எதனையும் உணர முடியவில்லை.
“நேவி அடிக்கிறான்னேன்று அலைந்து திரியாதீங்கள் அம்மா…. ஊரிலே போய் இருங்கோ…. ஒரு நாளைக்கு…. எங்களின் கடல் எங்களிடம் வரும்” என்று சொல்லிவிட்டுப் போனான்.
அதன் பிறகு ஒரு நாள் கூடத் தங்களுடைய செல்வத்தை அவர்கள் காணவில்லை. இனிமேல் காணவுமாட்டார்கள்.
இப்போதும் வினோத்தின் அம்மா அவனைத் துயரத்தோடு நினைவு கூறுகிறார்.
சின்னவனாய் இருக்கேக்க, என்னை வந்து கட்டிப்பிடித்துக் கொண்டு அண்ணை, அக்காமார் எல்லோரும் கலியாணம் செய்து போனதுக்குப் பிறகு, அம்மாவையும் அப்பாவையும் நான்தான் பார்ப்பன்…… என்று சொல்லுவானடா தம்பி.
—————-
அடுத்தநாள் தான் தம்பி தெரிஞ்சது. அதில நான் பெத்த குஞ்சுவும் ஒண்டெண்டு கடற்கரும்புலி கப்டன் வினோத்தின் அப்பா!
அண்டைக்கு ஊரெல்லாம் ஒரே பரபரப்பாய் இருந்தது. அண்ணைமார் கடற்கரைக்கு வாறதும் போறதுமாய் இருந்தினம்.
“இன்றைக்குப் பெடியள் கரும்புலியாய்ப் போய் நேவிக் கப்பலை அடிக்கப்போறாங்களாம்.” என்று, ஜனங்கள் பரவலாய்க் கதைக்கினம்.
“அப்படியெண்டா நாளைக்குக் காலமை நேவி அடிப்பான்” என்று கொஞ்சச்சனம் ஊரை விட்டுக் கிளம்பி விட்டினம். நல்லாய் இருண்டதுக்குப் பிறகு ஊர்ச்சனங்கள் கொஞ்சம் கப்பல் அடிக்கிறதைப் பார்ப்பதென்று கடற்கரைக்குப் போனார்கள், நாங்களும் போனம். கடலில் இருந்து கூப்பிடு தூரம்தான் எங்கள் வீடு. முகபாவத்தில் கவலையும் மகிழ்வும் மாறி மாறி வெளிப்பட அந்த அக்கா சொல்லிக்கொண்டிருந்தா.
அம்மாவும் அப்பாவும் கரைக்கு வரேல்லை, அவை வீட்டு வாசலிலேயே நின்றுகொண்டிருந்தனர். கரையில் நாங்கள் போய் பார்த்துக் கொண்டு நின்றம். படகுகள் வெளிக்கிட்டுப் போனது. நாங்கள் கொஞ்சம் தூரத்தில் நிண்டனாங்கள், இருள் வேறு. ஆட்களை அடையாளம் தெரியேலை… படகுகள் வெளிக்கிட்டன. கொஞ்ச நேரத்தில் இருளுக்குள் மறைந்து போய்விட்டது. இருளைப் போலவே மெளனமும் நிலவியது.
நாங்கள் இருளுக்கால கடலைப் பார்த்துக் கொண்டு நின்றம்.
தீடிரென பெரிய வெளிட்சமாய் நெருப்புச்சுவாலை கடலுக்குள் எரிய, நிலம் நடுங்கிற மாதிரி ஒரு வெடிச்சத்தம் கடலுக்குள் இருந்து வந்தது. எங்களை அறியாமலேயே கண்ணால கண்ணீர் வந்தது. மெதுவான குரலில் அம்மா… ஐயோ… என்ற சத்தங்கள் எல்லோர் வாயிலிருந்தும் உதிர்த்தன.
யாரார் பொடியள் போச்சுதுகளோ!? என்று நாங்கள் சொல்லி கவலைப்பட்டோம்.
ஒரு கனம் நிறுத்தி அக்கா தொடர்ந்து சொன்னாள்.
அடுத்த நாள் நேவி அடிப்பானென்று சனம் எல்லாம் வெளிக்கிட்டதால் நாங்களும் கொஞ்சம் தூரத்தில இருக்கிற சொந்தக்காரற்ற வீட்டுக்குப் போயிற்று, இரண்டு நாள்ள நிலைமையைப் பார்த்திட்டுத் திரும்புவம் என்று இரவிரவாய்ப் போனம். போறவழியில “காம்ப்” ஒன்றுக்கு முன்னால, எங்கட தம்பி ஓடித் திரிகிற மோட்டார் சைக்கிள் நின்றது.
அம்மா சொன்னா, “உங்க தம்பி நிற்பான் போல கிடக்கு… ஒருக்கா கேட்டுப்பார்” என்று தொடர்ந்து அம்மா கதைக்கத் தொடங்கினாள்….
நாங்கள் கூப்பிடக் கூப்பிட ஆள்மாறி ஆள்மாறி வந்து எட்டிப் பார்த்திட்டுப் போறினமே தவிர வெளியால ஒருத்தருமே வரேல்லை.
“வினோத்தின்ர அம்மாவடா…. வினோத்தின்ர அம்மாவடா….” என்று மாறி மாறிச் சொல்லிக் கேட்கிறது…. இருளுக்குள் ஒன்றும் தெரியவுமில்லை. ஏன் இவர்கள் ஒளியிறார்கள் என்று எனக்குள்ள நினைத்தேன். கொஞ்சநேரத்துக்குப் பிறகு, ஒருத்தர் பதுங்கிப் பதுங்கி வெளியில் வந்தார்.
“வினோத் நிற்கிறானா தம்பி…?”
“இல்லை…. அம்மா…. நீங்கள் எங்க நிற்பீர்கள் என்று சொல்லுங்கோ… நாங்கள் அவரை வரச் சொல்லிவிடுறம்…”
“அந்தா அவரின்ற மோட்டார் சைக்கிள் நிக்கிறது… பொய் சொல்லாதேங்க்கடா எங்க போட்டான்..?”
“அது சரியாச் சொல்லேலாதம்மா… நீங்கள் நிற்கிற இடத்தைச் சொல்லிப் போட்டுப் போங்கோ, காலையில் அனுப்பிவிடுறம்…”
என்னடா இவன், கேட்கிரதுக்கெல்லாம் ஒரு மாதிரியா மறுமொழி சொல்லுறான்…? என்ன கேட்டாலும் நாங்கள் நிக்கிற வீடு எது என்று கேட்கிறான் ? என்று எனக்குள்ள நினைத்துக்கொண்டு, நாங்கள் போற வீட்டுப் பாதையைச் சொல்லிப் போட்டுப் போனோம்.
சற்று நிறுத்தி பெருமூச்சொன்றை எறிந்துவிட்டு அம்மா ஆறுதலாகத் தொடர்ந்தாள்.
“அடுத்த நாள்தான் மோனை தெரிஞ்சிது, எங்கட பொடியும் போட்டானேன்று. நிக்கிற வீடு எதென்று அந்தப் பெடியன் திரும்பத் திரும்பக் கேட்டது ஏன் என்று, அப்பத்தான் விளங்கியது.”
வினோத்தின் அப்பா சொன்னார்….
“குண்டுச்சத்தம் கடலுக்குள் பெரிதாகக் கேட்க்கக் கேட்க்க , வீட்டு வாசலில நான் குந்தியிருந்தனான்…. யாரார் பெற்ற பிள்ளைகளோ என்று எனக்குள்ள நினைத்தேன்; ஆனால் அடுத்த நாள்த்தான் தம்பி தெரிஞ்சது, அதில நான் பெற்ற குஞ்சுவும் ஒன்று என்று.”

No comments