விஜயகலா வெளிநாட்டில் தஞ்சம்புக திட்டம் ?

அண்மையில் பதவி விலகிய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தனது பிள்ளைகளுடன் நாட்டை விட்டு வெளியேறுவதற்கு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் லண்டனில் அரசியல் தஞ்சம்புகவுள்ளதாகவும் தகவல்கள் பரப்பப்பட்டுவருகின்றன.

இந்நிலையில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் நாட்டைவிட்டு வெளியேற முன்னர், அவருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, உதய கம்மன்பில தலைமையிலான பிவிதுரு ஹெல உறுமய தெரிவித்துள்ளது.

பிவிதுரு ஹெல உறுமயவின் பரப்புரைச் செயலர் துசார திசநாயக்க, இதுபற்றிக் கருத்து வெளியிடுகையில்,

“விடுதலைப் புலிகள் தொடர்பாக சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்ட விஜயகலா மகேஸ்வரன் நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது.

சட்டத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் கோருகிறோம்.

ஏனென்றால் அவர் வெளிநாட்டுக்குச் சென்றால், விசாரணைகளுக்குத் தடையாக அமையும்.

அத்துடன், விஜயகலா மகேஸ்வரனின் உறுப்புரிமையை ஐக்கிய தேசியக் கட்சி ரத்துச் செய்ய வேண்டும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, விஜயகலா மகேஸ்வரன் தனிப்பட்ட பயணமாக பிரித்தானியா செல்லவுள்ளார் என்று கூறப்படுகிறது.

No comments