புலிகள் மீளெழ வாழ்த்தும் விசயகலா!


வடகிழக்கு தமிழர் தாயகத்தில் சட்டமொழுங்கை பேணவும் பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதுகாக்கவும் விடுதலைப்புலிகள் மீள் எழுச்சியடையவேண்டுமென அரச அமைச்சரான விசயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இலங்கை ஐனாதிபதியின் மக்கள் சேவையின் யாழ் மாவட்ட எட்டாவது தேசிய நிகழ்ச்சித் திட்டம் இன்று திங்கட்கிழமை காலை யாழில் ஆரம்பித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அங்கு உரையாற்றிய அவர் தற்போது தமிழ் மக்களை காப்பாற்ற புலிகள் வந்தால் தான் முடியுமெனவும் தெரிவித்தார்.

இலங்கை ஐனாதிபதி, பிரதமர் செயலங்களின் வழிநடத்தலில் உள்நாட்டலுவல்கள்  அமைச்சின் ஏற்பாட்டில் யாழ்.வீரசிங்கம் மண்டபத்தில் யாழ் அரச அதிபர் தலைமையில் நடைபெற்றிருந்தது.முதலமைச்சர்,அமைச்சர்கள் ஈறாக மாவை முதல்,சுமந்திரன்,ஈ.சரவணபவன் என தமிழரசு தரப்பும் பிரசன்னமாகியிருந்த நிலையில் புலிகள் மீள வரவேண்டுமென விசயகலா தெரிவித்திருந்தார்.

முன்னரும் விசயகலா இவ்வாறு சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவிப்பது வழமையாகும்.முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அமைப்பது முதல் தேசிய தலைவரிற்கு சிலை வைப்பதென இவ்வாறு அதிரடி கருத்துக்களை முன்வைப்பது அவரது உத்தியோகம்.

முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் பினாமி தொலைக்காட்சியின் தூண்டுதலில் மக்களிடையே தனது ஆதரவை அதிகரிக்க அவர் இத்தகைய கூத்துக்களை அரங்கேற்றுவதாக சொல்லப்படுகின்றது. 

No comments