சாமாதான தீர்வையை எதிர்பார்ப்பதாக தாய்லாந்து பிரதமரிடம் சம்பந்தன் எடுத்துரைப்பு

புதிய அரசமைப்பு ஊடாக சமாதானமான ஓர் தீர்வையே நாம் எதிர்பார்க்கிறோம். அத்தகைய ஒரு அரசியல் அதிகாரப்பகிர்வைக் கொண்டு வருவதற்கு அரசு எடுக்கும் முயற்சிகளுக்கு நாம் ஒத்துழைப்பினை வழங்குவோம்.

இவ்வாறு எதிர்க்கட்சி தலைவரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு வருகை தந்துள்ள தாய்லாந்தது தலைமை அமைச்சருடன் நேற்று கொழும்பில் சந்தித்துக் கலந்துரையாடினர். இது தொடர்பாக கூட்டமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

கடந்த காலங்களில் இடம்பெற்ற போரின் நிமித்தம் இலங்கை பெரிய முன்னேற்றங்களை அடைய முடியவில்லை .70 ஆண்டுகள் கடந்தும் இன்னமும் தேசிய பிரச்சினை தீர்க்கப்படாமல் உள்ளது. இந்தப் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வைப் புத்த பெருமானின் போதனைகளின் பிரகாரம் நியாயமானதாய் சரியாக செய்வதன் மூலம் அடைந்து கொள்ளலாம் என்று இரா.சம்பந்தன் சுட்டிக்காட்டினார்.

வடக்கு கிழக்கு பிரதேசங்களில் காணப்படும் தேவையை வலியுறுத்திய அதேவேளை தாய்லாந்து தனியார் முதலீட்டாளர்களை வடக்கு கிழக்கில் முதலீடுகளை மேற்கொள்ளும் நோக்கில் ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் தலைமை அமைச்சரிடம் இரா.சம்பந்தன் கேட்டுக்கொண்டார். மேலும் வடக்கு கிழக்கில் உள்ள மக்களுக்கு வேலைவாய்ப்புக்கான தேவை அதிகமாக உள்ளதனையும் அவர்களது பொருளாதார நிலைமை சீர் செய்யப்பட வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.

தாய்லாந்து முதலீட்டாளர்களினால் வடக்கில் நிறுவப்படவுள்ள சீனித்தொழிற்சாலை தொடர்பிலான முன்னேற்பாடுகளை வரவேற்ற இரா. சம்பந்தன், இந்த வகையிலான முதலீடுகள் போரினால் பாதிக்கப்பட்ட இப்பிரதேசங்களுக்கு அதிகமாக கொண்டு வரப்படவேண்டும் என்பதனையும் வலியுறுத்தினார்.

மேலும் மிகக் கடினமான உழைப்பாளிகளை கொண்ட இப்பிரதேசங்களின் அபிவிருத்தியில் போர் பெரிய பின்னடைவினை ஏற்படுத்தியதனை எடுத்துரைத்த இரா சம்பந்தன் , புதிய முதலீடுகள் வடக்கு கிழக்கில் மாத்திரமல்லாது முழு நாட்டு மக்களினதும் பொருளாதார முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும் எனவும் தெரிவித்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த தாய்லாந்து தலைமை அமைச்சர், நிச்சயமாக தாய்லாந்து தனியார் முதலீட்டாளர்களை இலங்கையில் முதலீடுகளைச் செய்வதற்கு ஊக்கப்படுத்துவேன் என உறுதியளித்த அதேவேளை எதிர்காலத்தில் இந்த முதலீடுகள் நடைமுறைக்கு வருவதனை உறுதி செய்து அவற்றிக்கு ஆதரவு நல்குமாரும் எதிர்க்கட்சி தலைவரை வேண்டிக்கொண்டார்.

சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் மட்டும் கலந்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments