மக்கள் பிரதிநிதிகளுக்கு மக்களிடம் செல்ல அருகதை!

விகிதாசார முறையில் தெரிவு செய்யப்பட்டவர்களே சபையின் 27 வட்டாரத்திற்கும் செல்வதற்கு அதிக உரித்துடையவர்கள். ஏனெனில் அவர்கள் தான் அனைத்து வட்டாரத்தில் உள்ள மக்களின் வாக்குகளின் அடிப்படையில் தெரிவானவர்களென தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பு யாழ்.மாநகரசபை உறுப்பினர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் தெரிவித்துள்ளார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினமான திங்கட்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார். 

யாழ்.மாநகர சபை பிரதி மேயரும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினருமான துரைராஜா ஈசன்  தனது வட்டாரத்தில் பணியிலீடுபட்டதாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி உறுப்பினர் ஒருவருக்கு எதிராக தொலைபேசி வழி மிரட்டலை விடுத்திருந்தார்.இதற்கு எதிராக முறைப்பாடொன்றும் இலங்கை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு உள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சியை சேர்ந்த விஸ்ணுகாந்தன் என்பவரே நேற்றைய தினமான ஞாயிற்றுகிழமை காவல்  நிலையத்தில் பிரதி முதல்வர்; தன்னை அச்சுறுத்தினார் என முறைப்பாடு செய்திருந்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தேசிய அமைப்பாளரும் , யாழ்.மாநகர சபையின் எதிர்க்கட்சி உறுப்பினருமான வி. மணிவண்ணனுடன் இணைந்து தான் கொழும்புத்துறை பகுதிகளில் வீதி முன் விளக்குகளை பொருத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டதாகவும் அது தொடர்பிலையே தன்னை பிரதி முதல்வர் அச்சுறுத்தினார் எனவும் தனது முறைப்பாட்டில் தெரிவித்திருந்தார்.
இதற்கே தற்போது வி.மணிவண்ணன் பதிலளித்துள்ளார்.

No comments