முதலமைச்சர் முதல் படப்பிடிப்பாளர்கள் வரை அழைப்பு!

அமைச்சர் விஜயகலாவின் மீண்டும் புலிகளை கட்டமைக்கும் பேச்சு தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சரிடரும் இலங்கை காவல்துறையின் குற்றத்தடுப்பு பிரிவினர் வாக்குமூலமொன்றை பதிவு செய்யவுள்ளதாக தெரியவருகின்றது.

குறித்த பேச்சு இடம்பெற்ற அமர்வில் முதலமைச்சரும் பங்கெடுத்திருந்த நிலையில் அவரது வாக்குமூலமும் பதிவாகவுள்ளதாக தெரியவருகின்றது.

இதனிடையே குறித்த அமைச்சரின் சர்ச்சைக்குரிய பேச்சினை காணொலியாக பதிவு செய்த படப்பிடிப்பாளர்கள்,அறிக்கையிட்ட ஊடகவியலாளர்கள் பலரையும் இன்று இலங்கை காவல்துறை அவர்களது வாக்குமூலங்களை பதிவு செய்ய யாழ்.காவல்நிலையத்திற்கு அழைத்துள்ளது.

குறித்த நிகழ்வில் அமைச்சரது உரையினை ஒளிபரப்பிய தொலைக்காட்சிகளிடமிருந்து பெறப்பட்ட காணொலிகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் காணொலிகளை பதிவு செய்த படப்பிடிப்பாளர்கள்,ஊடகவியலாளர்கள் விசாரணைக்கென அழைக்கப்பட்டுள்ளனர்.

இதனிடையே அமைச்சர் விஜயகலாவுடன் நெருங்கிய நட்பை கொண்டிருந்த படப்பிடிப்பாளர் ஒருவரே காணொலிகளை பல ஊடகங்களிற்கு அனுப்பியிருந்ததாக தெரியவந்துள்ளது.முன்னாள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோத்தபாயவின் பினாமி தொலைக்காட்சியின் பணியாளரான அவர் திட்டமிட்டு விஜயகலாவை மாட்டிவிட காணொலியை அனைத்து ஊடகங்களிற்கும் வழங்கினாராவென்ற சந்தேகம் எழுந்துள்ளது.  

No comments