தொகுதிவாரி தேர்தலுக்கே சு.க ஆதரவளிக்கும்


புதிய தேர்தல் முறையிலுள்ள குறைபாடுகளை சீர்செய்து மாகாண சபை தேர்தலையும் தொகுதிவாரி தேர்தல் முறையிலே நடத்த வேண்டும்.பழைய முறையில் தேர்தல் நடத்துவதை சுதந்திரக் கட்சி ஒருபோதும் அனுமதிக்காது என சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரும் அமைச்சருமான நிமல் சிறிபால டி சில்வா தெரிவித்தார்.

எவ்வளவு தான் பிரபலமான நபராக இருந்தாலும் சிறுகட்சிகளின் ஆதரவின்றி தனியாக ஜனாதிபதியாக தெரிவாகவோ ஆட்சியமைக்கவோ முடியாது.

இந்த யதார்த்தத்தை உணர்ந்து நாம் அரசியல் செய்ய வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

ஹாலி எல சுதந்திரக்கட்சி தொகுதி கூட்டத்தில் உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.

பெயர்களுக்கும் குடும்பங்களுக்கும் அரசியல் அதிகாரம் வழங்கும் நிலைமைக்கு முடிவு கட்ட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

காலத்திற்கு காலம் எழும் அரசியல் அலைகளுடன் அரசியல் செய்பவர்களுக்கு அரசியல் கொள்கைகள் மறந்து விடுகிறது. ஆனால் அரசியல் கொள்கைகளை மதித்து கட்சியை பாதுகாக்கும் சிறு குழுவாவது இருக்க ​வேண்டும். அத்தகைய குழுவொன்று இன்னும் இருப்பதை சுதந்திரக் கட்சி ஆதரவாளர்களுக்கு நினைவு படுத்துகிறோம்.

அரசியல் அலைகளுக்கு சிக்கி அரசியல் செய்யும் நபர்களுக்கு அரசியல் வரலாற்றில் ஒருநாளும் மீட்சி இருந்ததில்லை. புதிய யாப்புடன் எமது கட்சி அரசியல் சிக்கலாக மாறியுள்ளது. இன்றிருக்கும் தேர்தல் முறையூடாக உண்மையான மக்கள் விருப்பு தேர்தலினூடாக வெளிவருவதில்லை. இந்த தேர்தல் முறையிலுள்ள தவறுகளை சீர்செய்து மாற்றம் செய்ய வேண்டும்.

கடந்த 4,5 தசாப்தங்களாக விருப்பு வாக்கு முறையை ஒழித்து தொகுதிவாரி முறையினூாக தொகுதிக்கு பொறுப்பு கூறும் உறுப்பினர் நியமிக்க வேண்டும் என்று சுதந்திரக் கட்சி கோரி வருகிறது.

அதனால் தொகுதிக்கு பொறுப்பு கூறும் உறுப்பினர் ஒருவரை தெரிவு செய்யும் தேர்தல் முறைக்கு உடன்பட்டோம். நாம் உடன்பட்ட இந்த தேர்தல் முறையில் சிக்கல் இருக்கிறது.

உறுப்பினர் தொகை அதிகரித்தது. பெண் பிரதிநிதித்துவம் அதிகரித்தது. இந்த முறை தொடர்பில் மக்கள் மத்தியில் விரக்தி ஏற்பட்டுள்ளது.

No comments