இணக்கத்துக்கு வருகிறது அமைச்சர்கள் விவகாரம்


வடமாகாண அமைச்சர் சபை ஒன்று அடுத்த மாகாணசபை அமர்வுக்கு முன்னர் அமைக்கப்படும். முதலமைச்சருடனும், ஆளுநருடனும் நடாத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் இந்த நம்பிக்கையை தான் வெளியிடுவதாக அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறியுள்ளார்.
இன்று நடைபெற்ற வடமாகாணசபையின் 128வது அமர்வில் மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் அமைச்சர் சபை குறித்து கடந்த 16ம் திகதி நடைபெற்ற அமர்வில் நிறைவேற்றப்பட் ட தீர்மானத்திற்கு என்ன நடந்தது என கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளிக்கும்போதே அவைத் தலைவர் சீ.வி.கே.சிவஞானம் மேற்கண்டவாறு கூறியுள்ளார். இது தொடர்பாக சபையில் மேலும் குறிப்பிட்ட அவர்,

கடந்த 16ம் திகதி நடைபெற்ற மாகாணச பை அமர்வில் அமைச்சர் சபை தொடர்பாக தீர்மானம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. இந்த தீர்மானம் முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரனுக்கும், ஆளுநர் றெஜினோல்ட் கூரேக்கும் அனுப்பி வைக்கப்படும் என கூறப்பட்டது. அவ்வாறு அனுப்பபட்டதா? அதற்கு கிடைத்த பதில் என்ன? அவ்வாறு பதில் எதுவும் கிடைக்கவில்லை ஆயின் சட்டவாக்க பணிகள், அபிவிருத்தி பணிகள் கிடக்கில் இருக்கும். ஆகவே அமைச்சர் சபை தொடர்பான தீர்வு கிடைக்கும் வரையில் சபையை ஒத்திவையுங்கள், காரணம் அபிவிருத்தி மற்றும் சட்டவாக்க விடயங்கள் குறித்து பேசுவதற்கே சபை கூடுகிறது என்றார்.

தொடர்ந்து பேசிய மாகாணசபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் மேன்முறையீட்டு நீதிமன்ற தீர்ப்பில் 7 அமைச்சர்கள் என கூறப்பட்டுள்ளது இதற்கு என்ன தீர்வு? என கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த முதலமைச்சர் சீ.வி.விக்னேஷ்வரன் ஆளுநருக்கு நாம் ஆலோசனை வழங்க இயலாது. அவருக்கு ஆலோசனையை சட்டமா அதிபர் திணைக்களமே வழங்கவேண்டும். மேலும் இந்த விடயம் உச்ச நீதி மன்றில் வழக்கில் உள்ளதால் இதனை குறித்து நான் மேலும் பேச விரும்பவில்லை என கூ றினார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம், மற்றும் எதிர்கட்சிதலைவர் சி.தவராசா ஆகியோர் சிவாஜிலிங்கம் கூறிய கருத்தை மறுத்து 7 அமைச்சர்கள் என நீதிமன்ற தீர்ப்பில் குறிப்பிடப்படவில்லை என கூறினர். இதனை தொடர்ந்து பேசிய மாகாணசபை உறுப்பினர் கே.சயந்தன் உச்ச நீதிமன்றத்தில் இன்று எடுக்கப்பட்ட முதலமைச்சரின் மனு 9ம் மாதம் 5ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது என கூறினார்.

தொடர்ந்து அவைத்தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கூறுகையில், அமைச்சர் சபை பிரச்சினை தொடர்பாக ஆளுநரு டன் நேரடியாக 10 நிமிடங்களும், முதலமைச்சருடன் நேரடியாக 6 நிமிடங்களும் பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறேன். இதன்போது சில ஆலோசனைகளை நான் கூறியுள்ளேன். அதனடிப்படையில் இன்று காலை முதலமைச்சர் சபைக்கு வர முன்னர் என்னோடு சில ஆலோசனைகள்
குறித்து பேசியுள்ளார். ஆகவே அடுத்த சபை அமர்வுக்கு முன்னர் மாகாண அமைச்சர் சபை தொடர்பான பிரச்சினை தீர்க்கப்படும் என்றார்.

No comments