ரிஜடி தகவல் திரட்டுகின்றதா? தகவல் கோரும் முதலமைச்சர்!

கிளிநொச்சி வைத்தியசாலையில் நிகழ்ந்த மகப்பேறுகள் சம்பந்தமாக பயங்கரவாதத் தடுப்புப்பிரிவினர் தரவுகளைக் கேட்டதாகக் கூறப்படுகின்றது. படையினர் அல்லது காவல்துறையினர் இவ்வாறான கோரிக்கைகளை விடுக்கும் போது அலுவலர்கள் உடனே அவற்றை தனது கவனத்திற்குக் கொண்டு வரவேண்டும் என வடக்கு முதலமைச்சர் கோரிக்கை விடுத்துள்ளார். அவ்வறான கோரிக்கைகள் எமக்குத்தெரியப்படுத்தப்பட்டால் உடனே அதற்கான காரணங்களைக்கேட்டறிவோம். இது எல்லா அலுவலர்களுக்கும் பொருந்துமெனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சியில் மாற்றுத்திறனாளிகளிற்கான கட்டட திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய முதலமைச்சர் பாதிப்புக்களுக்கு உள்ளாகாத ஏனைய மாகாணங்களுக்கு வழங்குகின்ற முறையிலேயே 30 வருடங்களுக்கு மேல் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட எமது வடபகுதிக்கும் நிதிப் பங்கீடுகளை அரசாங்கம் மேற்கொண்டுவருகின்றனர். இம் முறை தவறானதென்றும் பாதிப்புக்குள்ளான எமக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யும்படியும் கோரினால் அதனை எமக்குத் தராது நாம் அபிவிருத்தி செய்யவில்லை என்று எம்மீது குறைகூறுகின்றார்கள். அல்லது தராத நிதி திரும்பிவிட்டதாக விசமப் பிரசாரம் மேற்கொள்ளுகின்றார்கள். 

எமது பாதிப்படைந்த பிரதேசத்தை முன்னேற்றுவதற்காக எங்கள் புலம்பெயர்ந்த உறவுகளிடம் இருந்து உதவிகளைப் பெற்று எமது பிரதேசத்தின் அபிவிருத்தியை மேற்கொள்ளலாம் என்ற நோக்கில் எம்மால் ஆக்கப்பட்ட முதலமைச்சர் நிதிய நியதிச்சட்டத்தை நான்கு வருடங்களாக அங்கீகாரம் வழங்காது தொடர்ந்து வந்த அரசாங்கங்கள் இழுத்தடிப்புச் செய்கின்றன.அது எமது வளர்ச்சியை எவ்வகையிலேனும் முடக்கிவிட வேண்டும் என்ற கபட நோக்கிலான செயற்பாடோ என்று எண்ணவேண்டியுள்ளது. வெளியில் இருந்து வரும் நிதிகள் அனைத்தும் மத்திக்கூடாகக் கொண்டு வர வேண்டும் என்பது தேவையற்ற ஒரு செயற்பாடு என முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

No comments