கொடுரம்! ஈனர்கள் இம் மண்ணில் புரிந்த ஈவிரக்கமற்ற கொடுரம்



அவர் ஒரு முன்னாள் பெண் போராளி, திருமணமாகி இரண்டு பிள்ளைகளின் தாய், தற்போது கிளிநொச்சியில் வாசிக்கின்றார். உடன் பிறந்த 3 சகோதரர்கள் போராளிகளாகவும் மேலும் ஒரு சகோதரன் எல்லைப்படை வீரனாகவும் இந்த மண்ணுக்காக விதையாகிப்போயினர். கணவர் ஒரு முக்கிய போராளி இறுதிப்போரின் போது வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்.

இவ்வாறு தனது குடும்பத்தையே இவ் மண்ணின் சுதந்திரப் போராட்டத்திற்கு அர்பணிந்து வாழ்ந்த குடும்பம் இன்று நிலையாக வாழ்வதற்கு ஓர் இடம் இன்றி வீடு இன்றி தனது ஒரு மகனையும் மகளையும் படிப்பிப்பதற்கு கூட வருமானமின்றி வறுமையுடன் பசியுடன் வாழுகின்றார்கள். இக்குடும்பத்திற்கு கடந்த மார்ச் மாதமளவில் யாழ்.ஏய்ட் நிறுவனம் 130,000 பெறுமதியான 10 லீற்றர் பால் தரக்கூடிய பசு மாடு ஒன்றையும் அதற்கான ஒரு தொகுதி தீவனத்தையும் பிள்ளைகளின் கற்றலுக்குத் தேவையான கற்றல் உபகரணங்களையும் மற்றும் உணவுப் பொருட்களையும் வழங்கியது கண்ணீர் நிறைந்த நன்றியுடன் பெற்று கொண்டாள் அந்த போராளி. இது நடந்து முடிந்த கதை

அந்த பசுவுடன்; தனது வாழ்வாதாரத்தையும் தனது பிள்ளைகளின் கல்வியையும் சிறிது சிறிதாக மீட்டெடுத்து கொண்டு அந்த தாய் வாழ்ந்த வந்த நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் நடைபெற்ற சம்பவம் பேரிடியாக வீழ்ந்தது அவர்களின் வாழ்வியலில்.

இலண்டன் வாழ் புலம் பெயர் ஈழத் தமிழரான திருமதி சரஸ்வதி சண்முகநாதன் 16-03-2018 அன்று யாழ்எய்ட் ஊடாக வாழ்வாதார உதவியாக வழங்கிய 10 லீற்றர் பால் தரக்கூடிய அடுத்த மாதம் கன்றீனப் போகும் பசுவை களவாடி வெட்டி இறைச்சியாக்கி கன்றை வெளியில் எடுத்து வீசி மிருகத்தனமான செயலினை நிகழ்த்தி உள்ளது ஒரு கும்பல்

இன்று அந்த தாய் மீண்டும் நிர்கதியான நிலையில்...

புலம் பெயர் நாடுகளில் உள்ளவர்கள் அங்கு தான் கஸ்டப்பட்டு உழைக்கும் பணத்தில் எமது தாயகத்தின் உறவுகளின் நிலை கண்டு அவர்களின் வாழ்வாதாரத்திற்காக உதவுகின்றார்கள். அந்த வாழ்வாதார உதவியே கதி என்று எத்தனையே குடும்பங்கள் இங்கு வாழ்கின்றனர். இது நிதர்சனமான உண்மை.

ஒரு குடும்பத்தின் அவர்களின் வாழ்வாதாரத்தின் முதுகெலும்பாக இருந்த ஒரு பசுவினையே கன்றினை வெளியில் எடுத்து விட்டு இறைச்சியாக்கும் ஈனர்கள் வாழும் தேசம் இது என்று தெரிந்தால் புலம் பெயர் நாடுகளில் உள்ளவர்கள் இவ்வாறான உதவிகளைச் செய்ய முன்வருவார்களா? நலிவுற்றவர்களில் வாழ்வில் தொடந்தும் வசந்தம் தான் வீசாதா? வலி கொண்டவர்கள் தொடர்ந்தும் வலியுடன் தான் வாழவேண்டுமா? இது தான் எம் நினைத்திற்கென நாம் வாங்கிக் கொண்ட அல்லது வகுத்துகொண்ட சாபமா?

No comments