கொக்குவிலில் வீடு புகுந்து தாக்குதல் !


கொக்குவில்  பகுதியில் நேற்று மாலை 7 மணிக்கும் 7.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் மோட்டார் சைக்கிள் குழுவினர் மேற்கொண்ட தாக்குதலில் மூன்று வீடுகள் சேதமடைந்தன.

கொக்குவில் பகுதியில் நேற்று மாலை 4 மோட்டார் சைக்கிளில் பயணித்த 8 பேரே மேற்படி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். இதன்போது கொக்குவில் பிரம்படி ஒழுங்கை   மற்றும் கொக்குவில் ஞானபண்டிதா வித்தியாசாலை அருகில் புதுவீதி ஆகிய இடத்திலும் ஆனைக்கோட்டை ஆகிய பகுதிகளிலேயே மூன்று வீடுகளிற்குள் புகுந்த இனம் தெரியாத குழுவினர் குறித்த தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.

கறுத்த மழை அங்கி , முகங்களை மூடிய தலைக்கவசம் கை உறை என்பன அணிந்தவாறு மோட்டார் சைக்கிள்களின் இலக்கத் தகடுகள் மறைக்கப்பட்ட நிலையில் சென்ற குழுவினரே மேற்படி தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர். இதன்போது வீடுகளின் கண்ணாடிகள் உடமைகள் என்பன அடித்து நொருக்கப்பட்டுள்ளதோடு தொலைக்காட்சிப் பெட்டி , குளிர்சாதனப் பெட்டி என்பனவும் வாளினால் வெட்டப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல்களில் சுமார் 5 லட்சம் உடமைகள் சேதமடைந்துள்ளன. இது தொடர்பில் யாழ்ப்பாணம் , மானிப்பாய் பொலிஸ் நிலையங்களில் முறையிடப்பட்டதனையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலிசார் மேலதிக விசாரணையினை மேற்கொண்டு வருகின்றனர்.

No comments