மைத்திரியையும் விசாரிக்குமாம் விசாரணை குழு:யாழில் தகவல்!


இலங்கை அரசினை பாதுகாப்பதற்கான தரகர்களிற்கு மீண்டுமொரு யாழ்.மக்கள் முகத்திலறைந்து செய்தி சொல்லியுள்ளனர்.குறிப்பாக ஜநாவில் இலங்கை அரசை பாதுகாக்கும் நிமல்கா பெர்னாண்டோ போன்றோர் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட குடும்பங்களினை சேர்ந்த தாயார்களால் துளைத்தெடுக்கப்பட்டிருந்தனர்.
இதனை தொடர்ந்து மக்களை திருப்திப்படுத்த எது எதனையோ சொல்ல வேண்டிய தேவை காணாமல் பேர்னோர் அலுவலகத்திற்கு ஏற்பட்டிருந்தது. 
குற்றஞ்சாட்டப்பட்டவர் எவராக இருந்தாலும் அவர் மீது விசாரணை நடாத்தப்படும் அது இராணுவ தளபதிகளாக இருந்தாலும் சரி, பாதுகாப்பு அமைச்சர், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர்களாக இருந்தாலும் சரி. அதற்கான அதிகாரம் எமக்கு வழங்கப்பட்டுள்ளதென காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தலைவர் சாலிய பீரிஸ் கூறியுள்ளார்.

இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு பின்னர் காணாமல்போனவர்கள் விடயத்தில் இராணுவ தளபதிகள், பாதுகாப்பு அமைச்சர்கள், அமைச்சின் செயலாளர்கள் விசாரிக்கப்படுவார்களா? என்ற கேள்விக்கு பதிலளித்த அவர் குற்றஞ்சாட்டப் பட்டவர் எவராக இருந்தாலும் விசாரிக்கப்படுவார்கள். 

அந்த விசாரணைகளில் அழுத்தங்களுக்கு இடமளிக்கப்படாது. பாரபட்சங்கள் காட்டப் படாது. என கூறினார். இதனை தொடர்ந்து போரின் நிறைவுப்பகுதியில் பாதுகாப்பு அமைச்சராக தற்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனா இருந்தமை தொடர்பாக கேட்டபோது ஜனாதிபதியாக இருந்தாலும், நிறைவேற்று அதிகாரத்தை கொண்டிருந்தாலும், சுயாதீனமான விசாரணைகள் நடாத்தப்படும். அதற்கான அதிகாரம் எமக்கு வழங்கப்பட்டிருக்கின்றது. 

மேலும் போர் காலப்பகுதியில் காணாமல் போனவர்கள் விடயத்தில் இராணுவமாக இருந்தாலும் சரி, முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் போராளிகளாக இருந்தாலும் சரி அவர்கள் மீதும் விசாரணைகள் நடாத்தப்படும் என்றார். 

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் பிரச்சினை இந்த நாட்டில் உள்ள நீண்டகால பிரச்சினை இதற்கு உடனடியாக தீர்வினை பெற்றுக் கொடுப்பேன். என பொய் வாக்குறுதி கொடுக்க நான் தயாராக இல்லை. ஆனாலும் ஆழமான விசாரணைகளை நடத்துவோம். 

காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயம் மிகவும் பாரதூரமான விடயமாக இருந்து வருகின்றது. இந்த விடயத்தில் உடனடியாக தீர்வினை பெற்றுக் கொடுப்போம் எனவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களை உடனடியாக தேடி தருவோம். எனவும் பொய்யான வாக்குறுதிகளை கூறுவதற்கு நாங்கள் தயாராக இல்லை. ஆனால் இதுவரை இடம்பெற்ற ஆணைக்குழுக்களை போன்று அல்லாமல் 


நாம் இந்த விடயத்தில் ஆழமான விசாரணைகளை நடாத்துவோம். மேலும் பாதிக்கப்பட்ட மக்களிடம் இரகசியமான விசாரணைகளையும் நடாத்துவோம். அதன்படையில் நியானமான தீர்வு ஒன்றுக்கான பரிந்துரைகளை செய்வோம். 

மேலும் இந்த விடயத்தில் சாட்சிகளுக்கு பூரணமான பாதுகாப்பை வழங்குவதற்கு தீர்மானித்திருக்கின்றோம். மேலும் பாதிக்கப்பட்டுள்ள மக்க ளுக்கு ஆற்றுப்படுத்தல் மற்றும் வாழ்வாதர உதவி வழங்கல் போன்ற விடயங்களை கொடுப்பதற்கும்  எமது அலுவலகத்தின் கீழ் நடைமுறை உள்ளதெனவும் தெரிவித்திருந்தார்.

எனினும் தமது பணிகளை அரசியலே தீர்மானிப்பதாக கொழும்பில் இக்குழு கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. 

No comments