மனிதஉரிமைகளில் மோசமான 30 நாடுகள் பட்டியலில் சிறிலங்கா


உலகில் மனித உரிமை கரிசனைகள் உள்ள 30 நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவை தொடர்ந்தும் உள்ளடக்கியிருக்கிறது பிரித்தானியா.

பிரித்தானிய வெளிவிவகார மற்றும் கொமன்வெல்த் பணியகத்தின், 2017ஆம் ஆண்டுக்கான மனித உரிமைகள் ஆண்டு அறிக்கை நேற்று லண்டனில் வெளியிடப்பட்டது.

இந்த அறிக்கையில், ‘மனித உரிமைகள் முன்னுரிமை நாடுகள்” என்று 30 நாடுகளின் பட்டியல் உள்ளடக்கப்பட்டுள்ளது. அந்தப் பட்டியலில் சிறிலங்காவும் இடம்பெற்றுள்ளது.

ஆப்கானிஸ்தான், பஹ்ரெய்ன், பங்களாதேஸ், பர்மா, புரூண்டி, மத்திய ஆபிரிக்க குடியரசு, சீனா, கொலம்பியா, வடகொரியா, கொங்கோ, எகிப்து, எரித்ரியா, ஈரான், ஈராக், இஸ்ரேல்,  மற்றும் ஆக்கிரமிப்புப் பகுதிகள், லிபியா, மாலைதீவு, பாகிஸ்தான், ரஷ்யா, சவூதி அரேபியா, சோமாலியா, தென்சூடான், சிறிலங்கா, சிரியா, சூடான், துர்க்மெனிஸ்தான், உஸ்பெகிஸ்தான், வெனிசுவேலா, யேமன், சிம்பாப்வே ஆகிய நாடுகள் இந்த மனித உரிமைகள் முன்னுரிமைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

மனித உரிமைகள் நிலைமைகளில் வரையறுக்கப்பட்ட முன்னேற்றங்களையே அடைந்துள்ளது என்று கூறியே, முன்னுரிமை நாடுகளின் பட்டியலில் சிறிலங்காவை உள்ளடக்கியிருக்கிறது பிரித்தானியா.

முன்னுரிமை நாடுகளின் மனித உரிமைகள் விடயங்கள் குறித்து  தீவிரமான கரிசனை கொண்டுள்ளதாகவும், இந்த நாடுகள், மனித உரிமைகள் சூழலை முன்னேற்றுவதற்கு சாதகமான நடவடிக்கைகளில் ஈடுபடும் என்று நம்புவதாகவும் பிரித்தானியா தெரிவித்துள்ளது.

சிறுபான்மையினர் மீதான தாக்குதல்கள், மனித உரிமைகள் மற்றும் நல்லிணக்க கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் சிறிலங்கா மிக மெதுவாகவே செயற்படுவது குறித்தும் பிரித்தானியா கவலை வெளியிட்டுள்ளது.

No comments