கோட்டபாய மீதான தாக்குதலுக்கு உதவியதாக கூறிய நபர் விடுதலை

2006 ஆம் ஆண்டு கொள்ளுப்பிட்டி பித்தளை சந்தியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ மீது நடத்தப்பட்ட தற்கொலைக் குண்டு தாக்குதலுக்கு, உதவி ஒத்தாசை வழங்கிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த ஶ்ரீஸ்கந்தராஜா கொழும்பு மேல் நீதிமன்றத்தால் நிபந்தனையற்ற முறையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். ஶ்ரீஸ்கந்தராஜா எனப்படும் சர்மா என்ற இந்து மதகுரு ஒருவரே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்கில் பிரதிவாதியான மதகுரு, பொலிஸாருக்கு வழங்கிய ஒப்புதல் வாக்குமூலம் சுயமாக வழங்கப்பட்டதல்ல என்று தெரிய வந்ததையடுத்து அவரை விடுதலை செய்யுமாறு நீதிபதி சம்பத் அபேகோன் உத்தரவிட்டுள்ளார்.
ஒப்புதல் வாக்குமூலத்திற்கு எதிராக வேறெந்த சாட்சிகளும் பிரதிவாதிக்கு எதிராக இல்லை என்று அரச தரப்பு சட்டத்தரணி நீதிமன்றில் தெரிவித்தார்.
இதன்காரணமாக அவரை விடுதலை செய்யுமாறு பிரதிவாதி தரப்பு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக பிரதிவாதியை நிபந்தனையற்ற விடுதலை செய்வதாக நீதிபதி சம்பத் அபேகோன் உத்தரவிட்டுள்ளார்.
குறித்த பிரதிவாதியான இந்து மதகுரு சுமார் 13 ஆண்டுகளாக விளக்கமறியலில் வைக்கப்பட்டு வந்துள்ளமை வழக்கு விசாரணைகளில் தெரிய வந்துள்ளது.

No comments