மாட்டுக்கள்ளன் -கோழிக்கள்ளனை குற்றம்பிடித்த கதை!

வடக்கின் முதன்மையான ஊழலாக கண்டறியப்பட்ட ரான் ஊழல் சூத்திரதாரியான டக்ளஸ் வடமாகாணசபையில் ஊழல்கள் தொடர்பில் விசாரணை செய்ய கோரியிருக்கிறார்.2000ம் ஆண்டில் யாழ்.குடாநாட்டினை யுத்த அழிவிலிருந்து மீளக்கட்டியெழுப்ப ஒதுக்கப்பட்ட நிதியே ரான் திட்டமாகும்.இந்நிதியில் சுமார் 400 மில்லியன் வரையில் அதற்கு பொறுப்பாக இருந்த டக்ளஸால் சுருட்டப்பட்டது.

இது தொடர்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த போதும் தனது அரசியல் செல்வாக்கினை பயன்படுத்தி வழக்கினை கிடப்பில் டக்ளஸ் போடுவித்திருந்தார்.சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு காத்திருப்பதாக கடந்த 18 வருடங்களிற்கு மேலாக குறித்த கோவை யாழ்.மேல்நீதிமன்றில் தேங்கிக்கிடந்துவருகின்றது.

இந்நிலையில் வடக்கு மாகாண சபையின் ஆயுட்காலம் இன்னும் சில மாதங்களே எஞ்சியிருக்கின்றது.இந்நிலையில், கடந்த நான்கு வருடத்திற்கு மேலான காலமாக வடக்கு மாகாண சபையானது பொது மக்களது நிதியினை ஊழல், மோசடிகள் செய்திருப்பினும் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படாதது தொடர்பில் உள்ளூராட்சி, மாகாண சபைகள் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் தனது அவதானத்தினை செலுத்த வேண்டும என டக்ளஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

ஏற்கனவே குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு, விசாரணைகள் நடத்தப்பட்டதாகக் கூறப்படுகின்ற அமைச்சர்கள் தொடர்பில் மீள் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதற்கும்,  அந்த அமைச்சர்களை பதவி நீக்கஞ் செய்த பின்னர், நியமிக்கப்பட்ட அமைச்சர்கள் தொடர்பிலும் ஊழல், மோசடி குற்றச்சாட்டகள் சுமத்தப்பட்டு வருவதால், அவர்கள் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்படுவதற்கும் நடவடிக்கைகள் எடுக்கப்படல் வேண்டுமென டக்ளஸ் கோரியுள்ளார்.

அத்துடன், தற்போதைய வடக்கு மாகாண சபை ஆட்சிபீடமேறிய நாள் முதற்கொண்டு, மக்களது நிதி எந்தெந்நத வகையில் செலவிடப்பட்டுள்ளன? என்னென்ன அபிவிருத்திப் பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன? என்னென்ன வாழ்வாதாரத் திட்டங்கள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளன? போன்ற அனைத்து விடயங்கள் தொடர்பிலும் ஆய்வுகள் மற்றும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கோரிக்கையினையும் டக்ளஸ் விடுத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments