சுதந்திரபுரத்தில் பெருமளவு ஆயுதங்கள் மீட்பு


முல்லைத்தீவு சுதந்திரபுர பகுதியில் இன்றுடன் அகழ்வு பணி நிறைவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதோடு, அபாயகரமான வெடிபொருட்கள் பல இன்றும் (20) மீட்க்கப்பட்டுள்ளதாக புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தனியார் ஒருவர் தனது காணிக்குள் இருந்த கிணறு ஒன்று சீரற்று இருந்ததால் அவற்றை அகழ்ந்து சீராக்க முயற்சித்துள்ளார். இதன்போது கிணற்றுக்குள் அபாயகரமான வெடிபொருட்கள் இருப்பது கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து சுதந்திரபுரம் மத்தி பகுதியில் நிலை கொண்டிருந்த கடற்படையினரிடம் தகவல் வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் வடக்கு கடற்படை உயர் அதிகாரி விக்ரம்சிங்க தலைமையில், நேற்று முன்தினம் (18) அந்த பகுதிக்கு சென்ற பொலிஸாரும் கடற்படையின் விசேட இராணுவ அணியினரும் அகழ்வு பணியில் ஈடுபட்டனர்.

இதன்போது விடுதலைப் புலிகளின் தயாரிப்பில் உருவாகிய பசீலன் 2000 ஆட்லறி செல் இரண்டு உள்ளிட்ட வெடிபொருட்கள் சில மீட்கப்பட்டுள்ளன.

மேலும், இந்த அகழ்வு பணி, நேற்று முன்தினம் பிற்பகல் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதுடன் நேற்றும் (19) தொடர்ந்து இடம்பெற்றது என புதுக்குடியிருப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போதும் வெடிபொருட்கள் மீட்கப்பட்டன. இதனை தொடர்ந்து இன்றும் (20) இடம்பெற்ற அகழ்வு பணியில் கிணறு முழுமையாக சுத்தப்படுத்தப்பட்டு ஆயுதங்கள் பல மீட்கப்படுள்ளன.

குறித்த அகழ்வுப் பணி நீதிமன்றத்தின் அனுமதியுடன் நீதிமன்ற பதிவாளர் உள்ளிட்ட அதிகாரிகள் முன்னிலையில் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

No comments