காவல்துறை மௌனம்:கவலையில் மஹிந்த?

நாட்டில் எவ்வளவோ தீய செயல்கள் இடம்பெற்று வருகின்றபோதிலும் பொலிசார் மெளனமாக இருக்கிறார்கள் என்று முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்தார்.

கேகாலை வரக்காபொல தள்ளியந்த ஆனந்த போதி விகாரையில்  புதிதாக அமைக்கப்பட்ட இரண்டு மாடி கட்டிடத்தொகுதியை  திறந்து வைத்து உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், மற்றவர்களை கள்ளன் கள்ளன் என்று கூறுகிறார்கள். பார்க்கும்போது கள்ளன் அரசாங்கத்தின் உள்ளேதான் இருக்கிறான்.
118 பேரும் பணம் வாங்கியதாக கூறுகிறார்கள். இவர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து நாட்டு மக்களை ஏமாற்றி வருகின்றார்கள்.

இந்த அரசாங்கம் மக்களுக்கு எதுவும் செய்தது கிடையாது.என்னை தோல்வி அடைய செய்து சிறிசேனவை ஜனாதிபதியாக்கினார்கள்.  தற்போது மற்றவர்கள் அதை இதை செய்வதாக அவருக்கு கூற முடியாது.  அனைத்துக்கும் அவர்தான் பொறுப்பு கூற வேண்டும்.

இன்று நாட்டை சீரழித்து விட்டார்கள். நாட்டில் நாளாந்தம் தீய செயல்கள் அதிகரித்து வருகின்றது.

குறிப்பாக கதிர்காம பெளத்த குருவுக்கு வெடி வைக்கப்பட்டுள்ளது. நகர சபை உறுப்பினர் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் கொலை செய்யப்பட்டார்கள்.இப்படியான தீய சம்பவங்கள் இந்த அரசாங்கத்தில் இடம்பெற்று வருகின்றது. பொலிசாரும் மெளனமாக இருந்து வருகின்றார்கள்.

இன்று நாட்டில் நிர்வாக சேவையாளர்கள் அவர்களின் சம்பளத்தை அதிகரிக்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றார்கள்.

இன்று நிர்வாக சேவையாளர்களின் சம்பளம் சாரதிக்கு கிடைக்கும் சம்பளத்தைவிட குறைவாகவே கிடைக்கின்றது. இது அசாதாரணமான செயலாகும்.

நாட்டை அபிவிருத்தி செய்யும்  சேவையாளர்களுக்கு சம்பளம் குறைவு இது குறித்து அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதியும் பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ மேலும்  தெரிவித்தார்.
இதன்போது ஆங்கில மொழி மூல அறநெறி பாடசாலை மாணவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பாரிசில்கள் வழங்கி கெளரவிகப்பட்டது.

இந்நிகழ்வில் சப்ரகமுவ மாகாண முன்னாள் முதலமைச்சர் மஹிபால ஹேரத், பாராளுமன்ற உறுப்பினர்களான கனக ஹேரத், தாரக பாலசூரிய  உட்பட  நகர சபை  மற்றும்  பிரதேச தலைவர்கள் உறுப்பினர்கள், முன்னாள் சப்ரகமுவ மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.

No comments