ஆவா என்ன? கோத்தாவே வரட்டும் தயார்: சிவாஜி!

வடமராட்சி கிழக்கில் வாடியமைத்து கடலட்டை பிடிக்கும் ஒருவர், வடமாகாணசபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கத்திற்கு வித்தியாசமான அச்சுறுத்தல் விடுத்துள்ளார். 

இந்த விவகாரத்தில் தொடர்ந்து தலையிட்டு, தமக்கு சிக்கலை கொடுத்தால் “ஆவா குழுவை வைத்து செய்வோம்“ என அச்சுறுத்தல் விடுத்துள்ளார். வடமராட்சி கிழக்கிற்கு சென்று கடல்வளங்களை கொள்ளையிடுவதுமல்லாமல், துணிந்து இப்படி அச்சுறுத்தல் விட்டுள்ளதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் கடலட்டை பிடிப்பதற்கு மக்கள் எதிர்ப்பு வெளியிட்டுள்ள நிலையில், அது தொடர்பான கலந்துரையாடல் நேற்றுகாலை மருதங்கேணி பிரதேசசெயலகத்தில் நடைபெற்றது. அதன்பின்னர் வாடி அமைந்திருந்த இடங்களிற்கு சிவாஜிலிங்கம், கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதிகள், பொதுமக்கள் நேரடியாக சென்றனர்.

மாமுனை பகுதியில் வாடியமைத்து கடலட்டை பிடித்து வரும் ஒருவரே சிவாஜிலிங்கத்திற்கு இப்படி பகிரங்க எச்சரிக்கை விடுத்தார்.

கடலட்டை பிடிக்கும் விடயத்தில் வீணாக மூக்கை நுழைத்தால் ஆவா குழுவை வைத்து செய்வோம் என அவர் மிரட்டல் விடுத்தார். ஆவா குழுவால் அல்ல, கோத்தா குழுவாலும் தன்னை ஒன்றும் செய்ய முடியாதென சிவாஜிலிங்கம் அவருக்கு பதிலளித்தார்.

நாகர்கோவில் பகுதியில் வாடியமைத்து கடலட்டை பிடிக்கும் முஸ்லிம் நபர் ஒருவருடன் சிவாஜிலிங்கம் பேச்சு நடத்தியபோது, வாடி அமைப்பதற்காக காணி உரிமையாளருக்கு 11 இலட்சம் ரூபா கொடுத்துள்ள தகவலை அம்பலப்படுத்தியுள்ளார்.

அந்த காணி உரிமையாளரும் அந்த இடத்தில் நின்றார். அவர் சிவாஜிலிங்கத்தை பார்த்து- “நீங்கள் என்ன சட்ட நடவடிக்கை வேண்டுமானாலும் எடுங்கள். அதைப்பற்றி எமக்கு கவலையில்லை. உங்களால் செய்ய முடிந்ததை செய்து பாருங்கள்“ என பெரிய சத்தமாக அங்கு ரகளையில் ஈடுபட்டார்.

கடலட்டை பிடிப்பவர்களிற்கு வாடியமைக்க காணி கொடுத்தவர்கள், கடலட்டை பிடிப்பதற்கு எதிரான மக்கள் எழுச்சியை குழப்பும் விதமாக நடப்பதற்கு- அவர்கள் பெற்றுக்கொண்ட பெருமளவு பணமே காரணமென்பது இப்பொழுது வெளிப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

No comments