மரணத்தை அறிந்த நடேசன்:சட்டத்தரணி சுகாஸ்!

நாட்டுப்பற்றாளர் ஊடகவியலாளர் நடேசன் (ஐயாத்துரை நடேசன்) அவர்கள் தனது மரணத்தை அறிந்திருந்தார் என முன்னணி இளம் சட்டத்தரணியும் அவரது மருமகனுமான சுகாஸ்  கனகரத்தினம் தெரிவித்தார்.

அவரது 14ம் ஆண்டு நினைவு வணக்கநாள் நேற்று யாழ்.ஊடக அமையத்தின் ஏற்பாட்டினில் படுகொலையான ஊடகவியலாளர்கள் நினைவு தூபி முன்னதாக நடைபெற்றிருந்தது.

அங்கு சிறப்புவிருந்தினராக பங்கெடுத்த அவர் நினைவு தூபிக்கு மலர் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய பின்னர் ஊடகங்களிடையே கருத்து தெரிவித்தார்.

தனது மரணத்திற்கு முன்னதாக நடேசன் வீரகேசரி வாரவெளியீட்டிற்கு எழுதிய கட்டுரையில் மாமனிதர் நடராறா ரவிராஜ் தொடர்பில் எழுதியிருந்தார்.அதில் இவ்வாரம் ரவிராஜ் பலிகொள்ளப்பட்டுள்ளார்.அடுத்து யாரோவென கேள்வியுடன் கட்டுரை முடிவுறுத்தப்பட்டிருந்தது.
அதே போன்றே அடுத்த வார கட்டுரையை எழுத நடேசன் இருந்திருக்கவில்லையென சுகாஸ்  தெரிவித்தார். 

2004ம் ஆண்டு வைகாசி மாதம் 31ம் நாள் மட்டக்களப்பில் தனது வீட்டில் இருந்து காலை பணிக்குச் சென்றுகொண்டிருந்த போது நடேசன் சுட்டுக்கொல்லப்பட்டிருந்தார். நான்கு பிள்ளைகளின் தந்தையான இவர் படுகொலை செய்யப்பட்டபோது அகவை 50 ஆகும்.


யாழ்ப்பாணம் நெல்லியடியில் பிறந்து வளர்ந்த ஜ .நடேசன் மட்டக்களப்பில் பல ஆண்டுகள் வாழ்ந்ததுடன், தென் தமிழீழ மக்கள் மீதும், அந்த மண் மீதும் அளப்பரிய பற்றுக்கொண்டிருந்தார்.



இனப் படுகொலைகள் மட்டுமன்றி மட்டக்களப்பு பற்றியும், தென் தமிழீழம் பற்றியும் எப்பொழுது எந்தத் தகவல் கேட்டாலும் உடனே சொல்லும் ஆற்றல் கொண்டிருந்த இவர், சொல்வதுடன் நிறுத்தி விடாது அவற்றை எழுதி தொலைநகலில் அனுப்பியும் வைப்பார். ஏதாவது ஒரு படுகொலை அல்லது முக்கிய விடயங்கள் பற்றி ஊடகங்கள் கேட்க மறந்து விட்டால்கூட அதனை ஞாபகம் ஊட்டி உடனே அனுப்பி வைப்பார்.

பல தடவைகள் நேரடியாகவும், தொலைபேசி ஊடகவும் கொலை மிரட்டல், அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருந்த போதிலும், ஏன் வீட்டின் மீது குண்டுத் தாக்குதல் (2000ஆம் ஆண்டு) இடம்பெற்ற போதிலும்கூட, அஞ்சாது தனது குடும்பத்துடன் இறுதிவரை மட்டு மண்ணில் இருந்து மக்களிற்காகக் குரல்கொடுத்த ஒரு சிறந்த ஊடகனவார்.

தற்போது அவரது மகள் யாழ்ப்பாணத்தின் முன்னணி சட்டத்தரணிகளுள் ஒருவராக உள்ளார்.அவரது கணவரான சட்டத்தரணி சுகாஸ் முன்னணி சமூக  செயற்பாட்டாளராக உள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments