தாயகம் திரும்பியும் அவலம்!


தாயகம் திரும்பிய ஈழ தமிழ் மக்களை இலங்கை காவல்துறை பிரித்துவைத்துள்ளனர். தமிழ்நாட்டின் கடலூரில் அகதிகளாகத் தஞ்சம் புகுந்திருந்த ஆறு ஈழத்தமிழர்கள் இராமேஸ்வரத்திற்கும் ஈழத்தின் தலைமன்னாருக்கும் இடையே இருக்கும் மணற் திட்டு ஒன்றில் அநாதரவாகக் கைவிடப்பட்டிருந்தார்கள். இலங்கைக் கடற்படை இவர்கைளப் புதன்கிழமை நண்பகல் அளவில் கைதுசெய்தது. இவர்களில் 27 வயது தாய் ஒருவரும் அவரின் 7 வயதும் 9 வயதும் நிரம்பிய இரண்டு ஆண் சிறுவர்களும் அடங்குகிறார்கள். தற்போது அவர்கள் இலங்கை நீதித்துறையினால் வௌ;வேறு இடங்களில் பிரித்தது வைக்கப்பட்டுள்ளார்கள். 

அவரின் இரண்டு சிறார்களும் அவரது பிள்ளைகள் தானா என்று ஐயம் எழுவதாக இலங்கைப் பொலிஸார் குற்றச்சாட்டை எழுப்பியுள்ளனர்.மேலும் மனிதக் கடத்தல் குறித்த விடயமாக இதைத் தாம் சந்தேகிப்பதாகவும் தலைமன்னார் பொலிஸார், மன்னார் நீதவானிடம் முறையிட்டிருக்கிறார்கள்.

இலங்கை பொலிஸாரின் இந்த குற்றச்சாட்டின் விளைவாக, குறித்த இரண்டு சிறுவர்களையும் சிறுவர் விடுதியொன்றில் தற்காலிகமாகக் கையளிக்குமாறும் மற்றையவர்களை வவுனியா சிறையில் எதிர்வரும் 8ம் திகதி வரையும் காவலில் வைக்குமாறும் மன்னார் நீதிமன்ற நீதவான் ஏ அலெக்ஸ்ராஜா உத்தரவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.

மீள்திரும்பியிருக்கும் அகதிகளாக அன்றி மனிதக் கடத்தலுக்கு உட்படுத்தப்படுபவர்களாக இவர்கள் சந்தேகக் கண்கொண்டு பார்க்கப்படும் நிலை தோன்றியிருப்பது மக்களிடையே அச்சத்தை தோற்றுவித்துள்ளது.

தாயார் சுமதி சுலோஜன் (27) பேசாலையைப் பிறப்பிடமாகக் கொண்டவர். அவரது கணவர் திருகோணமலையைச் சேர்ந்தவர். அவர் அகதியாக அவுஸ்திரேலியா சென்றிருந்த நிலையில் அவரும் இரண்டு பிள்ளைகளும் தமிழகத்தின் கடலூரில் அகதி வாழ்க்கை வாழ்ந்திருந்தார்கள்.


இவர்களுடன் பேசாலையைப் பிறப்பிடமாகக் கொண்ட பெருமாள் இந்திரகுமார் (36), உயிலங்குளத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட ராஜதுரை யுவராஜ் (28), நடராஜா பாக்கியநாதன் (28) ஆகிய மூன்று ஆண்களும் இலங்கைகக் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.

No comments