மட்டக்களப்பில் விபத்து! குழந்தை உட்பட இருவர் பலி! ஓட்டுநர் தப்பியோட்டம்

மட்டக்களப்பு – கொழும்பு நெடுஞ்சாலை கிரான் பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இருவர் உயிரிழந்ததுடன், மூவர் படுகாயமடைந்துள்ளனர்.

காத்தான்குடியிலிருந்து கொழும்பு நோக்கிச் சென்ற அதி சொகுசு தனியார் பேருந்தும், வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த சிற்றூர்த்தி ஒன்றுடனொன்று மோதியது.

குறித்த விபத்து நேற்று (திங்கட்கிழமை) இரவு சம்பவித்துள்ளது.

விபத்தில் வானின் சாரதியான 25 வயதுடைய இளைஞனும், 11 வயதுடைய சிறுவனும் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளனர். இதேவேளை, சிற்றூர்தியில் பயணித்த மேலும் மூவர் படுகாயமடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


விபத்தினை அடுத்து பேரூந்தின் ஓட்டுநர் தப்பிச் சென்றுள்ளதாகவும், அவரை கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் ஏறாவூர் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இரு வாகனங்களும் அதிக வேகத்தில் பயணித்தமையே விபத்திற்கான காரணம் என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளன. இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





No comments