நுண்நிதிக்கடன்! தமிழர் தாயகத்தில் 59 பேர் பலி!

நுண்நிதிக் கடன் நிறுவனங்கள் வழங்கிய கடனை அறவிடும் விடயத்தில் முன்னெடுக்கும் சில செயற்பாடுகளால், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 59 பெண்கள் உயிரிழந்துள்ள​னரென, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீதரன், நேற்று (07) தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற ஒத்திவைப்புப் பிரேரணை மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய சிறிதரன் எம்.பி, பெண்களைத் தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களின் பெண்களே, குறித்த கடன் பிரச்சினையில் சிக்கி உயிரை மாய்த்துக்கொண்டுள்ளனரெனக் குறிப்பிட்டார். 

வடக்கு, கிழக்கில் தமது செயற்பாடுகளை ஆரம்பித்த நுண்நிதி நிறுவனங்கள், இன்று மலையகம் முதல் ஹம்பாந்தோட்ட வரை வியாபித்துள்ளதாகவும், அவர் சுட்டிக்காட்டினார். 

இதற்கமைய, கிளிநொச்சி மாவட்டத்தில் 13 பெண்களும் யாழ்ப்பாணத்தில் 19 பெண்களுமாக, வடக்கு மற்றும் கிழக்கில் மொத்தமாக 59 பெண்கள், குறித்த நுண்நிதி நிறுவனங்களின் அடாவடிகளால் உயிரிழந்துள்ளனரென்றும் குறிப்பிட்டார்.

வடக்கில், 1 இலட்சம் மக்களுக்கு 23 என்ற அடிப்படையில், வங்கிக் கிளைகள் காணப்படுகின்றன. இதற்கமைய, 6 இலட்சம் மக்களைக் கொண்ட யாழ்ப்பாண மாவட்டத்தில் 136 வங்கிக் கிளைகளும் ஒன்றரை இலட்சம் மக்களைக் கொண்ட கிளிநொச்சியில் 24 வங்கிக் கிளைகளும், மன்னாரில் 23, முல்லைத்தீவில் 23, வவுனியாவில் 27 வங்கிக் கிளைகளும் காணப்படுவதாக, சிறிதரன் எம்.பி சுட்டிக்காட்டினார். 

குறித்த நுண்நிதி நிறுவனங்கள், முன்னாள் போராளிகளையும் மாற்றுத் திறனாளிகளையும், பெண்களைத் தலைமைத்துவத்தைக் கொண்ட குடும்பங்களையும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களையும் மையப்படுத்தியே இயங்கி வருகின்றனவெனக் குறிப்பிட்ட அவர், இது, பொருளாதாரத்தை உறிஞ்சும் நடவடிக்கையென்றும் சபையில் சுட்டிக்காட்டினார். 

No comments