மல்லாகம் துப்பாக்கிச் சூடு! சந்தேக நபர்களின் வாக்குமூலத்தில் முரண்பாடு!

மல்லாகம் சம்பவத்துடன் தொடர்புடை சந்தேக நபர்களை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடம் சிங்கள மொழியில் மாத்திரமே வாக்கு மூலத்தை பதிவு செய்திருந்தனர். இதனால் அவர்கள் கூறிய விடயத்திற்கும் பதிவு செய்யப்பட்ட விடயத்திற்குமிடையில் முரண்பாடுகள் காணப்பட்டிருந்தது.

இதனையடுத்து நாம் தமிழ் மொழியில் வாக்கு மூலத்தை பதிவு செய்வதற்கான அறிவுறுத்தல்களை மேற்கொண்டிருந்தோம் என மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.மாவட்ட பணிப்பாளர் கனகராஜ் தெரிவித்துள்ளார்

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது,

இத் துப்பாக்கி சூட்டு சம்பவம் தொடர்பாக நேரில் சென்று சகல விடயங்களையும் அவதானித்து தேவையான தகவல்களை சேகரித்துள்ளோம். குறிப்பாக கொல்லப்பட்ட நபரது உறவினர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள் ஆகியோரிடம் தகவல்களை பெற்றிருக்கின்றோம்.

மேலும் இச் சம்பவத்துடன் தொடர்புபட்டதான குழுக்களிற்கு இடையிலான மோதல் சம்பவம் தொடர்பில் தெல்லிப்பழை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டவர்களிடமும் தகவல்களை பெற்றுள்ளோம். இதன்போது நாம் உடனடியாக ஓர் தீர்மானத்தை மேற்கொள்ள வேண்டியிருந்தது.

அதாவது தெல்லிப்பழை காவல்துறை கைது செய்தவர்களிடம் சிங்கள மொழியில் மாத்திரமே வாக்கு மூலத்தை பதிவு செய்திருந்தனர். இதனால் அவர்கள் கூறிய விடயத்திற்கும் பதிவு செய்யப்பட்ட விடயத்திற்குமிடையில் முரண்பாடு காணப்பட்டிருந்தது.

இதனையடுத்து நாம் தமிழ் மொழியில் வாக்கு மூலத்தை பதிவு செய்வதற்கான அறிவுறுத்தல்களை மேற்கொண்டிருந்தோம். அதேபோன்று இச் சம்பவம் தொடர்பில் நேரில் கண்ட பொது மக்களது சாட்சியங்களை தெல்லிப்பழை காவல்துறையினர் பதிவு செய்திருக்கவில்லை. எனவே நேரில் கண்ட பொது மக்களது சாட்சியங்களையும் பதிவு செய்யுமாறு காவல்றையினருக்கு அறிவுறுத்தியிருந்தோம்.

இவை தவிர சுன்னாகம் காவல் நிலையத்திற்கு சென்று துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்ட காவல்துறை உத்தியோகத்தர் தான் வெளியே சென்றமை, துப்பாக்கிகளை எடுத்து சென்றமை தொடர்பான விடயங்களை தகவல் புத்தகத்தில் பதிவு செய்துள்ளாரா என்பது தொடர்பாகவும் தகவல்களை பெற்றுள்ளோம்.

அத்துடன் இச் சம்பவம் தொடர்பாக மேலதிகமான நடவடிக்கைகள் , காவல்துறையினரால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் என்பன தொடர்பாக தொடர்ச்சியாக அவதானம் செலுத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

No comments