வடமராட்சி கிழக்கு:சுமந்திரன்,அஸ்மின்,சுகிர்தன் கூட்டு அம்பலம்!


வடமராட்சிக்கிழக்குப்பகுதியில் வாடியமைத்து தங்கியிருந்து சிங்கள,முஸ்லீம் மீனவர்களை வெளியேற்றவேண்டுமென்ற விவகாரத்தில் தமிழரசு நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் அவரது பங்காளிகளும் மக்களை ஏமாற்ற முற்பட்டுள்ளமை அம்பலத்திற்கு வந்துள்ளது. தென்னிலங்கை மீனவர்களது கடலட்டை பிடிப்பினால் உள்ளூர் மீனவர்கள் பாரியளவில் பாதிக்கப்படுகின்றனர். இதனை தடுத்து நிறுத்த கடற்றொழில் நீரியல் வளத்துறை அமைச்சருடன் பேசப்போவதாக புறப்பட்டு சென்றிருந்த எம்.ஏ.சுமந்திரன் பற்றி தகவல்கள் இல்லாதுள்ளது.

இந்நிலையில் மீனவ அமைப்புக்கள் தாமாக முன்வந்து இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து வடமராட்சிக்கிழக்கு பிரதேச செயலகத்துக்கு முன்னால் நாளை காலை 10மணிக்கு முற்றுகைப்போராட்டமொன்றை நடத்தவிருக்கின்றனர்.
இந்நிலையில் நாளை நடக்கவிருக்கும் போராட்டத்துக்கு கட்சிபேதமின்றி கடல்வளத்தைப்பாதுகாக்க அனைவரும் ஒன்றிணைய வடமாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் அழைப்புவிடுத்துள்ளார்.

இந்நிலையில் போராட்டம் ,பேச்சுவார்த்தையென பிரச்சாரங்களை மேற்கொண்டவாறு போராட்டகாரர்களுடன் இரகசிய பேச்சுக்களை நடத்த சுமந்திரனின் ஆலோசனையுடன் மற்றொரு உறுப்பினரான அஸ்மின் தென்னிலங்கை மீனவர்களை அனுப்பியுள்ளார்.

அஸ்மினால் அனுப்பிவைக்கப்பட்ட தென்னிலங்கை மீனவர்கள் மற்றொரு மாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கத்தை சந்தித்து தென்னிலங்கை மீனவர்களை விரட்டவேண்டாமென கோரிக்கை முன்வைத்துள்ளதுடன் போராட்டங்களை கைவிடவும் வலியுறுத்தியுள்ளனர்.

எனினும் இதனை மறுதலித்துள்ள கே.சிவாஜிலிங்கம் வடமராட்சி கிழக்கு மீனவ அமைப்புக்களது போராட்டத்தில் தன்னால் தலையிட முடியாதென தெரிவித்துள்ளார்.

இதனிடையே.சட்ட ரீதியான அனுமதி பெற்று கடலட்டை பிடிப்பது சட்டவிரோதமானதல்ல. கடலட்டை பிடிப்பதற்காக எமது மக்களின் இறங்குதுறைகளைப் பயன்படுத்துவது, எமது மக்கள் மீன்பிடித்தொழில் ஈடுபடும் கடற்பிரதேசங்களை மார்க்கமாகக் கொண்டு கட்டலட்டைப்பிடிப்பதற்காக ஆழ்கடலுக்குச் செல்வது, எமது கரையோர நிலங்களில் வாடியமைத்து கடலட்டைகளைப் பதனிடுவது, குறித்த பிரதேசங்களில் சுகாதாரச் சீர்கேடுகளை ஏற்படுத்துவது போன்ற காரணிகளால் எமது மக்களும், எமது கரையோரங்களும் எமது மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகின்றது என்பதை தெளிவாக எடுத்துரைத்தல் அவசியமாகும்.

கடலட்டை பிடிப்பதற்கான அனுமதிகளைப் பெற்றுக்கொள்வோர் அதற்குப் பொறுத்தமான ,றங்குதுறைகளையும் அடையாளம் செய்வது சிறப்பானது. அத்தோடு கடலட்டை பிடிப்பதற்கான அனுமதித்திப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிபந்தனைகள் முழுமையாகக் கடைப்பிடிக்கப்படுவதும் உறுதி செய்யப்படுதல் வேண்டுமென வடமராட்சி கிழக்கு மக்களிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தவாறே தென்னிலங்கை மீனவர்களை சிவாஜிலிங்கத்தை சந்திக்க அஸ்மின் அனுப்பியுள்ளார்.

இதன் மூலம் சுமந்திரன்,அஸ்மின்,சுகிர்தன் கும்பலது ஏமாற்று நாடகம் அம்பலமாகியுள்ளது.

No comments