கொக்குவில் இந்து ஆசிரியர் மீது தாக்குதல் - கைதான இருவருக்கு விளக்கமறியல்


கொக்குவில் இந்துக் கல்லூரி ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டாவது சந்தேகநபரையும் வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது.

கொக்குவில் இந்துக் கல்லூரின் ஒழுக்கக் கட்டுப்பாட்டு பொறுப்பாசிரியரும் உயர்தர கணித பாட ஆசிரியருமான நாடராஜா பிரதீபன் (வயது -41), கடந்த புதன்கிழமை மாலை பாடசாலைக்கு அண்மையாக வைத்து தாக்கப்பட்டார்.

இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் ஒன்றே அவர் மீது தாக்குதலை மேற்ககொண்டது என விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆசிரியர் வழங்கிய தகவலின் அடிப்படையில் நேற்று முன்தினம் காலை கொக்குவிலைச் சேர்ந்த இளைஞன் கைது செய்யப்பட்டார். விசாரணைகளின் பின்னர் அவர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். அவரை வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் கட்டளையிட்டது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை கைது செய்யப்பட்ட உடுவிலைச் சேர்ந்த இரண்டாவது சந்தேகநபர் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் நேற்று முற்படுத்தப்பட்டார். தாக்குதலுக்குள்ளான ஆசிரியர் வழங்கிய வாக்குமூலத்தின் அதனடிப்படையிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டார். ஏனையவர்களை கைது செய்ய உள்ளதால் சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்கவேண்டும்  என்று பொலிஸார் மன்றில் சமர்ப்பணம் செய்தனர்.

தாக்குதலுக்கும் சந்தேகநபருக்கும் தொடர்பில்லை என்று சந்தேகநபர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி மு.றெமிடியஸ் மன்றில் சமர்ப்பணம் செய்தார். இருதரப்பு விண்ணப்பங்களையும் ஆராய்ந்த நீதிவான் சி.சதீஸ்தரன், சந்தேகநபரை வரும் 18ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

No comments