இரண்டாவது நாளாக மன்னாரில் புதைகுழி அகழ்வு!


மன்னார் நகரத்தின் நுழைவாயில் உள்ள, பாலத்துக்கு அருகில், மனித எலும்புக்கூடுகள் இருப்பது உறுதி செய்யப்பட்டு இரண்டாம் நாளாக இன்று செவ்வாய்கிழமையும் மன்னார் நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா முன்னிலையில், மண் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் இருந்த கூட்டுறவுச் சங்க கட்டடம் ஒன்றில், 1990 ஆம் ஆண்டு தொடக்கம், 2009 வரை இரணுவம் நிலை கொண்டிருந்ததாக தமிழ் சட்டத்தரணிகள் கூறியுள்ளனர். இந்த கூட்டுறவுக்கட்டடத்தில் இருந்து 50 அடி தூரத்தில் கட்டடத்திற்கு எதிராக தற்போதும் இலங்கை இராணுவம் நிலைகொண்டுள்ளது.
நீதவான் முன்னிலையில், விசேட தடயவியல் நிபுணர்கள்; ஆராய்வை முன்னெடுத்திருந்தனர்.
ஐந்து மாடி கட்டடம் ஒன்றை கட்டுவதற்காக, குறித்த கூட்டுறவு கட்டடம், கடந்த மாரச் மாதம் இடிக்கப்பட்டிருந்தது. கட்டடம் அமைப்பதற்கான அடித்தள வேலைகளை முன்னிட்டு மணல் அகழப்பட்டது. அந்த அகழ்வின்போது மனித எலும்புக் கூடுகள் கண்டு பிடிக்கப்பட்டன.
பொதுமக்களின் முறைப்பாட்டை அடுத்து, மன்னார் நீதிமன்றம் மண் அகழும் பணியை தற்காலிகமாக இடை நிறுத்தியிருந்தது. ஏற்கனவே அங்கிருந்து அகழ்ந்தெடுக்கப்பட்ட மண், குறித்த இடத்தில் இருந்து வேறு பகுதியில் கொட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் நேற்று திங்கட்கிழமை மன்னார் நீதிவானன் முன்னிலையில், இரண்டு இடங்களிலும் மண் ஆய்வு செய்யப்பட்டபோது, மனித எலும்புக் கூடுகள் இருப்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
அதன் தொடர்ச்சியாக இன்று நடத்தப்பட்ட ஆய்வில் நிலத்தடியிலிருந்து சுமார் 7 அடி ஆழத்தில் மனித புதைகுழி இருப்பது உறுதியாகியுள்ளது.
அதேவேளை, இந்த மனித எச்சங்கள், எலும்புக் கூடுகள் எந்தக் காலப்பகுதிக்குரியவை என்பது குறித்து தடவியல் நிபுணர்களும் சட்ட நிபுணர்களும் மேலும் ஆய்வு செய்து நீதிமன்றத்திற்கு அறிவிப்பார்கள். அதன் பின்னரே அடுத்த கட்ட விசாரணைகள் இடம்பெறுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

No comments