பொதுச் சின்னத்தில் களமிறங்குமாம் சுதந்திரக் கட்சி!


அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்து பிரிந்து செயற்படும் அனைத்து தரப்பினைரையும் ஒன்றிணைத்து -பொதுச் சின்னம் ஒன்றில் களமிறங்கவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் யாப்பா அபேவர்த்தன தெரிவித்தார். நல்லாட்சி அரசாங்கத்திற்கு எதிரான முதலாவது மாநாடு நேற்று மாத்தறை உயன்வத்தை மைதானத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், “ ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அங்கம் வகிப்பவர்கள் பிரிந்து செயற்பட்டு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை களமிறக்கினால் அந்த அபேட்சகரினால் வெற்றி பெற முடியாது. எனவே கட்சியிலிருந்து பிரிந்து செயற்படும் சகல தரப்பினரையும் ஒன்றிணைத்து ஒரு பொது சின்னத்தின் கீழ் களமிறங்கி வெற்றி பெறுவோம். மேலும் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்கும் அபேட்சகர் நாட்டிலுள்ள தமிழ், முஸ்லிம்கள் உட்பட அனைவரினதும் ஆதரவைப் பெற்ற முன்மாதிரியாக இருக்க வேண்டும். கட்சியிலுள்ள அனைத்து தரப்பினருடனும் பேச்சுவார்த்தை நடத்தி அவ்வாறான ஒரு வேட்பாளரை களமிறக்குவோம் என்றார்.

No comments