மன்னிப்பு தேவையில்லை: சிவாஜிக்கு பதில்!


அனுமதி பெறப்படாமல் நிகழ்வை நடத்தியமைக்காக உத்தியோகத்தர்கள் வருத்தம் தெரிவிக்கும் பட்சத்தில் அதனை ஏற்று அவர்களை சேவையில் தொடர அனுமதிக்க வேண்டுமென வடக்கு மாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ள கருத்து அனைத்து மட்டங்களிலும் கடுமையான சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.

நினைவேந்தல் என்பது தமிழ் மக்களிற்குள்ள உரிமை.அதனையே அவர்கள் நிறைவேற்றியுள்ளார்.அதற்காக மன்னிப்புக்கோருவதென்றால் அவர்கள் ஏதோ தவறினை இழைத்ததென அடையாளப்படுத்தப்பட்டுவிடுமெனவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மே 18 முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் ஹற்றன் நஸனல் வங்கியின் கிளிநொச்சி கிளையில் போரில் உயிரிழந்த பொது மக்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதுதொடர்பில் அந்த வங்கிக் கிளையின் உதவி முகாமையாளர் மற்றும் உத்தியோகத்தர் ஒருவரும் முகாமைத்துவத்தால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டனர்.

முகாமைத்துவத்தின் இந்த தீர்மானத்தைக் கண்டித்து சமூக ஊடகங்களில் கருத்துக்கள் வெளியிடப்படுகின்றன. அத்துடன் சிலர் தமது சேமிப்பு கணக்கை மூடியும் உள்ளனர்.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளில் பாடசாலைகளிலே அரைக் கம்பத்தில் மாகாணக் கொடியை ஏற்றுமாறும் அலுவலகங்களிலே அஞ்சலியைச் செலுத்துமாறும் வடக்கு மாகாண சபையின் சார்பில் முதலமைச்சரும் கல்வி அமைச்சரும் கோரியிருந்தனர். அதனை ஏற்று பல இடங்களிலே அஞ்சலி செலுத்தப்பட்டது. அதேபோன்று தான் ஹற்றன் நஸனல் வங்கியின் கிளிநொச்சி கிளையிலும் அஞ்சலி நிகழ்வு நடத்தப்பட்டது.

முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை செய்வதற்கு மக்களுக்கு உரிமை உண்டு என அமைச்சர் ராஜித சேனாரட்னவும் முன்னாள் இராணுவத் தளபதி; சரத் பொன்சேகாவும் கூறியிருந்தனர். அவ்வாறாயின் அமைச்சர் ராஜித சேனாரட்ன கூறியதையும் இவர்கள் அவமரியாதை செய்கிறார்களா? என்ற கேள்வி எழுகிறது.


தமிழர்களை பணிப்பாளர் சபையில் கொண்டிருக்க கூடிய ஹற்றன் நஸனல் வங்கி, இவ்வாறு நடந்து கொண்டுள்ளது வருத்தமளிக்கிறது. வங்கியின் இந்தச் செயற்பாட்டை அறிந்தவுடன் நூற்றுக் கணக்கானோர் தமது கணக்குகளை மூட ஆரம்பித்துள்ளனர். இந்த நிலை நல்லதொரு அறிகுறி  இல்லை.


இடைநிறுத்தப்பட்ட உத்தியோகத்தர்களின் வேலைக்கு ஆபத்து வருமாகவிருந்தால், வடக்கு - கிழக்கில் மாத்திரமல்ல தமிழ் மக்கள் எங்கு வாழ்ந்தாலும் அவர்கள் ஹற்றன் நஸனல் வங்கியை புறக்கணிக்கும் நிலைக்கு தள்ளவேண்டாம்.


மக்கள் கொதிப்படைந்துள்ளார்கள். அதனால் வங்கிக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் இறங்கினால் அது வங்கியின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படும். எனவே உத்தியோகத்தர்களின் இடைநிறுத்த உத்தரவை வங்கியின் முகாமைத்துவம் மீளப் பெறவேண்டும். இல்லையேல் தமிழ் மண்ணிலிருந்து ஹற்றன் நஷனல் வங்கி வெளியேறுகின்ற நிலமை உருவாகுமென சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments