மத்திக்கு தாளம் வேண்டாம்:வடமாகாணமே முதன்மையானது!


மத்திய அரசினது தாளத்திற்கு ஆடுவதை விடுத்து வடமாகாணசபையின் கருத்துக்களினை கவனத்திலெடுத்தாலே சேப்பா அமைப்பிற்கு உதவி கிட்டுமென வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.


ரணிலின் பினாமி அமைப்பாக செயற்படும் சேபா நோர்வே உள்ளிட்ட புலம்பெயர் அரச ஆதரவு தமிழ் தரப்புக்கள் சிலவற்றை கூட்டிணைத்து வடகிழக்கிற்கான உதவியெனும் பெயரில் சர்வதேச மட்டத்தில் நிதி திரட்டி தெற்கிற்கு வழங்கும் அமைப்பாகும்.

இதனது சதிகள் தெரிந்து அதனை முதலமைச்சர் நிராகரித்து வந்திருந்த நிலையில் தற்போது ஜநா உதவி அமைப்புக்களது இணைப்பாக வடக்கில் கால் ஊன்ற அவ்வமைப்பு முற்பட்டுள்ளது.

முன்னாள் சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்தை புலம்பெயர் தேசங்களிற்கு அழைத்து சென்று 6ஆயிரம் கோடியில் வடக்கு வைத்தியசாலைகளை புனரமைக்கவுள்ளதாக பிரச்சாரம் செய்ததும் குறித்த அமைப்பேயாகும்.
தன்னை பதவி கவிழ்த்ததால் இத்தகைய உதவிகள் கிடைக்காது போய்விடுமென தனது கட்சி பத்திரிகைகள் மூலம் அவர் பிரச்சாரமும் செய்திருந்தார்.

இந்நிலையில் குறித்த சேபா அமைப்பு எத்தகைய வேலைத்திட்டங்களை முன்னெடுக்க முடியுமென்பது தொடர்பில் மக்கள் கருத்தறியும் கூட்டமொன்றை கூட்டியிருந்த முதலமைச்சர் அங்கு கருத்து தெரிவிக்கையில் மத்தியை ஆத்திரமூட்டினால் கிடைப்பதும் கிடைக்காமல் போய்விடுமோ, மத்திக்கு ஏற்றவாறு நாங்கள் நடந்து கொள்ள வேண்டும், அவ்வாறு நடந்தால்த்தான் சலுகைகளைப் பெறலாம் என்ற மனோநிலையில் அவர்கள் நடந்து வருகின்றார்கள். உதாரணத்திற்கு ஒரு உணவகம் அண்மையில் திறக்கப்பட்டது. அதற்கு தெற்கத்தைய உணவகங்களின் சிங்களப் பெயரைச் சூட்ட வேண்டும் என்று மத்தி எதிர்பார்த்தது. ஹெலபொஜூன் என்ற பெயரைச் சூட்ட வேண்டும் என்று கூறப்பட்டது. நான் அதற்கு சம்மதிக்கவில்லை. வேண்டுமெனில் ஹெல பொஜூன் என்ற சொல்லின் தமிழாக்கத்தைப் பாவிக்கலாம் என்றேன். அதாவது ஹெல -ஈழம், பொஜூன் - உணவகம் என்றவாறு ஈழ உணவகம் என்று பெயர் வைக்கலாம் என்று மத்திய அமைச்சருக்குக் கூறினேன். அதற்கு அவர் சம்மதிக்கவில்லை. அவ்வாறாயின் எமது வடமாகாண அதிகாரத்தின் கீழ்வரும் உணவகங்கள் போன்று அம்மாச்சி என்று பெயர் சூட்டுவோம் என்றேன். அவர் எதுவும் கூறவில்லை. உணவகத்தைத் திறக்கவும் வரவில்லை. 

உணவகம் திறக்கப்பட்டு விட்டாலும் எமது அலுவலர்கள் இதுவரையில் அதற்குப் பெயரிடவில்லை. அவ்வளவு பயம் மத்திக்கு. மத்திய அரசாங்கத்தினர் என்ன கூறுவார்களோ என்று தம்மைத்தாமே ஒடுக்கிக்கொள்ளும் நிலைமையையே நான் இங்கு காண்கின்றேன். மக்களின் ஆதரவைப் பெற்ற மக்கள் பிரதிநிதிகள் இங்கு அதிகாரம் செலுத்துகின்றார்கள் என்பதை இங்குள்ள அதிகாரிகள் பலர் ஏற்றுக்கொள்வதாக இல்லை. மத்தியின் அதிகாரம் எப்பொழுது திரும்பவும் வரும் மத்திக்கு காக்காய் பிடித்து எமது தனிப்பட்ட நலன்களை எவ்வாறுநிறைவேற்றலாம் என்றே அவர்கள் சிந்திக்கின்றார்கள் போல் தெரிகிறது. 

அண்மையில் கொழும்பு சென்று ஒரு அலுவலர் முல்லைத்தீவில் கடற்படையினர் காணிகளை விட்டு வெளியேற்றப்பட வேண்டும் என்று மக்கள் கோரவில்லை அரசியல் வாதிகளே கோருகின்றார்கள் என்று அரசாங்கத்துக்கு ஐஸ் வைத்திருக்கின்றார். மக்கள் அல்லும் பகலும் அவர்களை வெளியேற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது அவருக்குத் தெரியவில்லை. 

ஆகவே நான் கூறவருவது என்னவென்றால் தேவைகள் மதிப்பிடும் போது எமக்கிடையேயான பரஸ்பரம் கருத்துப்பரிமாற்றம் போதியவாறு நடைபெற வேண்டும் என்பதையே வலியுறுத்துகின்றேன். 

இத்தேவைகள் மதிப்பீடு எமது முழுமையான பங்குபற்றலுடன் நடைபெற்றுள்ளது என்று எமது மக்கள் ஏற்றுக்கொள்வதாய் அமைய வேண்டும். இதுவரைகாலமும் மத்தியின் தலையீடு வெகுவாக இருந்து வந்துள்ளது. மத்தி தனது நலனையே முன்னிறுத்த நடவடிக்கைகளை எடுத்து வந்தது. உதாரணத்திற்குப் போரினால் பாதிக்கப்பட்ட விதவைகள் பற்றிய தரவுகளில் 29ஆயிரம் பேரில்  போரில் மாண்ட கணவர்மார்களை இயற்கை மரணம் எய்தினார்கள் என்று முழுப் பூசணிக்காயைச் சோற்றில் புதைத்தார்கள். இவ்வாறு மத்திக்கு மத்தளம் அடிக்காது எம்முடன் வெகுவாகக்கலந்துரையாடும் நடைமுறையை சேபா மேற்கொள்ள வேண்டுமெனவும் முதலமைச்சர் அழைப்பு விடுத்துள்ளார்.

No comments