மக்களுடன் மக்களாக முன்னணி !



தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினர் இன்று (09.05.2018) இரணைதீவு மக்களைச் சந்தித்து அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய உணவுப் பொருட்களை வழங்கியதுடன் அம்மக்கள் கேட்டுக்கொண்டதற்கிணங்க தேவாலயத்திலிருந்து மக்கள் குடியிருப்புப் பகுதிக்குச் செல்லும் பாதையும் துப்பரவு செய்து கொடுக்கப்பட்டள்ளது.

இரணைதீவு மக்கள் தங்கள் சொந்த நிலங்களில் குடியேறியதையடுத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் கடந்தவாரம் அம்மக்களைச் சென்று சந்தித்து அவர்களின் உடனடித் தேவைப்பாடுகள் குறித்து கேட்டறிந்துள்ளார். 
அதன்போது அம்மக்கள் தேவாலயத்திலிருந்து தமது வீடுகளைச் சென்று துப்பரவு செய்வதற்கான வீதி பற்றைகள் சூழ்ந்திருப்பதாகவும் அதனை சீர்படுத்தித் தருமாறும் கோரியிருந்தனர்.

இதனடிப்படையில் யாழ் வர்த்தகர்கள் மற்றும்பொது மக்களிடமிருந்து திரட்டப்பட்ட உலர் உணவுப் பொருட்களுடன் தமது தூயரநகரம் வேலைத்திட்டக் குழுவினருடன் இரணைதீவிற்குச் சென்றிருந்தார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களென பலரும் அக் குழுவில் பயணம் செய்து போராட்டத்திலீடுபட்டிருந்த மக்களை சந்தித்து உரையாடி தமது ஆதரவை தெரிவித்திருந்ததோடு உதவிப் பொருட்களையும் கையளித்தனர்.


பின்னராக மக்களின் வேண்டுகோளின் அடிப்படையில் அம் மக்களுடன் இணைந்து வீதி துப்பரவு செய்யும் பணியினையும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் மேற்கொண்டிருந்தனர்.

இலங்கை கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இரணைதீவு பகுதியை விடுவிக்க கோரி அப்பிரதேச மக்கள் உள்ளிருப்பு போராட்டமொன்றை அங்கு ஆரம்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. 

No comments