பிரான்சில் நடைபெற்ற தமிழின அழிப்பு நினைவேந்தல்

மே 18 முள்ளிவாய்க்கால் இன அழிப்பின் 9 ஆம் ஆண்டு நினைவேந்தல் பேரணி நிகழ்வு பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு,  தமிழீழ மக்கள் பேரவை, தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்பு மற்றும் அனைத்து உபகட்டமைப்புக்களின் ஏற்பாட்டில் நேற்று (18.05.2017) வெள்ளிக்கிழமை  பேரெழுச்சியுடன் இடம்பெற்றது.

பிற்பகல் 15.00 மணியளவில் பேரணி பாரிசு  La Chapelle   நிலக்கீழ்த் தொடருந்து நிலையத்தின் அருகாமையில் இருந்து ஆரம்பமாகி பல்லின சமூகத்தினரும் பார்த்திருக்க  தமிழீழ மக்களுக்கு  இடம்பெற்ற அவலங்கள் அடங்கிய பதாதைகள் கருத்துப்படங்களுடனும் தமிழீழத் தேசியக்கொடிகளைத் தாங்கியபடி  பாரிசின்  முக்கிய பகுதிகளுக்கு ஊடாகச் சென்று Place de la République  இனை அடைந்தது.
அங்கு முள்ளிவாய்க்கால் இறுதி மண் மீட்பு யுத்தத்தில் படுகொலை செய்யப்பட்ட பொதுமக்கள் மற்றும் போராளிகள் நினைவாக வணக்க நிகழ்வும் ​- தொடர்ச்சியான எமது நீதிக்கான போராட்டத்தை வலியுறுத்தி பொதுக் கூட்டமும் இடம்பெற்றது.

அங்கு விசேடமாக அமைக்கப்பெற்றிருந்த முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபியின் முன்பாக வணக்க நிகழ்வுகள் இடம்பெற்றன.

பொதுச் சுடரினை பிரான்சு தமிழ்ச்சங்கங்களின் கூட்டமைப்புப் பொறுப்பாளர் திரு.பாலகுமாரன் அவர்கள் ஏற்றிவைக்க, ஈகைச் சுடரினை முள்ளிவாய்க்காலில் உறவுகளை இழந்த செல்வராசாவின் மகனும் வாகரை வண்ணனின் சகோதரனும்  ஏற்றிவைத்தார்.

அகவணக்கத்தைத் தொடர்ந்து நிகழ்வில் கலந்துகொண்ட அனைவரும்; மலர்வணக்கம் செலுத்தினர். தொடர்ந்து அரங்க நிகழ்வுகள் ஆரம்பமாகின.

பேரணியில் கலந்து கொண்ட குர்திஸ்டான்  விடுதலை இயக்க சகோதரர்களும் கலந்துகொண்டு தமது ஆதரவினை வெளிப்படுத்தியிருந்தனர்.

பிரான்சு தமிழீழ மக்கள் பேரவை ஊடகப்பேச்சாளர் திரு.மோகனதாஸ்  மற்றும்  தாய்த் தமிழகத்தில் இருந்து வருகைதந்திருந்த தமிழின உணர்வாளரும் இயக்குனருமான திரு.ஆர்.கே. செல்வமணி அவர்களின் சிறப்புரையும்  பிரான்சு பரப்புரைப் பொறுப்பாளரின்  உறையும்  இடம்பெற்றிருந்தது.
 அவர்தனது உரையில், இவ்வாறான நிகழ்வுகள் தொடர்ந்துசெய்யப்படவேண்டியதன் அவசியம் பற்றியும், எதிர்கால சந்ததியினரான் குழந்தைகளுக்கு இந்த விடயங்களை உணர்த்தவேண்டி பாரிய பொறுப்பும் எம்கையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

செவ்ரோன், ஒள்னேசுபுவா, திரான்சி மாணவிகளின் முள்ளிவாய்க்கால் நினைவுசுமந்த எழுச்சி நடனங்களும் இடம்பெற்றிருந்தன. லாக்கூர்னெவ் தமிழ்ச்சோலை மாணவர்களின் ஆற்றுகையுடன் கூடிய நாடகமும் சிறப்பாக இடம்பெற்றிருந்தது.

நிறைவாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் பாடலுடன் நிகழ்வுகள் யாவும் நிறைவுகண்டன.

No comments