மட்டக்களப்பில் ஈபிஆர்எல்எவ் மேதினக் கூட்டத்தில் கூட்டமைப்பு பிரமுகர்கள் பங்கேற்பு!


ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மே தின நிகழ்வுகள் இன்று மட்டக்களப்பில் நடைபெற்றது. ´தொழிலாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்று´ என்னும் தலைப்பில் இந்த மே தின நிகழ்வு மட்டக்களப்பு வாவிக்கரை வீதியில் உள்ள ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் மாவட்ட அலுவலகத்தில் இந்த நிகழ்வு நடைபெற்றது. ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின், பிரதி தலைவரும் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான இரா. துரைரெட்னம் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும் முன்னாள் கிழக்கு மாகாண அமைச்சருமான கி.துரைராஜசிங்கம், கிழக்கு மாகாண சபையின் முன்னாள் பிரதி தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் உட்பட பலர் கலந்துகொண்டனர். இந்த நிகழ்வில் விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகள், மீன்பிடி சங்கங்களின் பிரதிநிதிகள் கால்நடை பண்ணையாளர்கள் சங்க பிரதிநிதிகள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்கம், மாதர் அபிவிருத்தி சங்க பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர். இதன்போது விவசாயிகள், மீனவாகள், கால்நடை பண்ணையாளர்கள், ஆசிரியர்கள், உள்ளுராட்சி சபை தொழிலாளர்கள், வேலையற்ற பட்டதாரிகள், தொண்டராசிரியர்கள், பாலர் பாடசாலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

No comments