வவுனியா சிறையில் மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள் விசாரணை!


வவுனியா விளக்கமறியல் சிறைச்சாலையில் கைதிகளுக்கு அநீதி இழைக்கப்படுவதாக கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாக, மனித உரிமைகள் ஆணைக்குழு இன்று விசாரணைகளை முன்னெடுத்தது. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா மாவட்ட பொறுப்பதிகாரி சட்டத்தரணி ஆர்.எம்.வசந்தராஜா தலைமையில் சென்ற குழுவினர் விளக்கமறியல் சிறைச்சாலையில் நிலைமைகளை ஆய்வு செய்து சிறைக் கைதிகளிடம் நீண்ட நேரம் விசாரணைகளை மேற்கொண்டனர். அண்மையில் விளக்கமறியல் சிறைக்கைதி ஒருவர் நீதிமன்றத்தில் வழக்கு விசாரணைக்கு அழைத்து வரப்பட்டபோது, விளக்கமறியல் சிறைச்சாலையில் இடம்பெறும் கைதிகளுக்கு எதிரான அநீதிகளை நீதிவானின் கவனத்துக்கு கொண்டு வந்திருந்தார். இதன் பின்னர் நேற்று சட்டத்தரணிகளும் சிறைச்சாலை அநீதிகளுக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து இன்று காலை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் கைதிகளிடம் விசாரணைகள் மேற்கொண்டிருந்தனர். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவித்த வவுனியா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பதிகாரி, “சிறைச்சாலையிலுள்ள கைதிகளிடமும் சிறைச்சாலை அதிகாரிகளிடமும் சிறைக்காவலர்களிடமும் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு அறிக்கைகள் பெறப்பட்டுள்ளது. பெற்றுக் கொள்ளப்பட்ட அறிக்கைகளை கொழும்பு தலைமை அலுவலகத்துக்கு அறிக்கையிடப்படும்” என தெரிவித்தார்.

No comments