சிறிலங்காவின் பாதுகாப்பு உயர் மட்டங்களுடன் இந்திய இராணுவத் தளபதி சந்திப்பு


சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் பிபின் ராவத், நேற்று சிறிலங்காவின் பாதுகாப்புச் செயலர் மற்றும் முப்படைகளின் தளபதிகளைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
நான்கு நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் கொழும்பு வந்த இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் ராவத் நேற்று, கொழும்பில் சிறிலங்கா அரச மற்றும் பாதுகாப்புத் துறை உயர்மட்ட அதிகாரிகளுடனான சந்திப்புகளில் பங்கேற்றார். நேற்று பிற்பகல் சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சில், பாதுகாப்புச் செயலர் கபில வைத்தியரத்னவைச் சந்தித்த ஜெனரல் ராவத், பாதுகாப்புத் துறையில் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விவகாரங்கள் தொடர்பாக பேச்சுக்களை நடத்தினார்.
அத்துடன், சிறிலங்காவின் கூட்டுப் படைகளின் தளபதி அட்மிரல் ரவீந்திர விஜேகுணரத்ன மற்றும் சிறிலங்கா கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் சிறிமேவன் ரணசிங்க ஆகியோரையும் இந்திய இராணுவத் தளபதி தனித்தனியாகச் சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்தச் சந்திப்புகள் கூட்டுப்படைகளின் தலைமையகத்திலும், கடற்படைத் தலைமையகத்திலும் இடம்பெற்றன. இந்தச் சந்திப்புகளின் போது, இருதரப்பு பாதுகாப்பு ஒத்துழைப்புகளை வலுப்படுத்துவது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

No comments