ஒட்டுசுட்டான் விகாரை விவகாரம்- இராணுவத் தளபதிக்கு அழைப்பாணை!


முல்லைத்தீவு- ஒட்டுசுட்டான் பகுதியிலுள்ள 64 ஆவது படைப்பிரிவில் அமைக்கப்பட்டுள்ள பௌத்த விகாரை தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு வரும், மனித உரிமைகள் ஆணைக்குழு வவுனியா அலுவலகம், குறித்த படைமுகாமின் பொறுப்பதிகாரியையும் இலங்கை இராணுவத் தளபதியையும் எதிர்வரும் 25 ஆம் திகதி விசாரணைக்கு வருமாறு அழைப்பாணை விடுத்துள்ளது. கற்சிலைமடுப் பகுதியில் புதுக்குடியிருப்பு செல்லும் பிரதான வீதியில் தனியார் காணி ஒன்றில் 64 ஆவது படைப்பிரிவின் இராணுவ முகாம் அமைந்துள்ளது. அதில் பௌத்த விகாரை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. அப்பகுதி தனியார் ஒருவருக்குச் சொந்தமானது என்பதை பிரதேச செயலகம் உறுதிப்படுத்தியுள்ளது. இவ்விடயம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், தனது காணியை மீட்டுத்தருமாறு காணியின் உரிமையாளர் மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்திருந்தார். இதையடுத்து மனித உரிமைகள் ஆணைக்குழுவின் வவுனியா பொறுப்பதிகாரியும் சட்டத்தரணியுமான ஆர். எல். வசந்தராஜா தலைமையில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதுடன் எதிர்வரும் 25 ஆம் திகதி குறித்த படை முகாமின் பொறுப்பதிகாரியையும், இலங்கை இராணுவத் தளபதியையும், காணியின் உரிமையாளரையும் விசாரணைக்கு வருமாறு மனித உரிமைகள் ஆணைக்குழுவினால் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

No comments