மண்டைதீவை காப்பாற்ற களத்தில் விந்தன்!


மண்டைதீவுப் பகுதியில் இலங்கை கடற்படையினருக்கு காணி சுவீகரிக்கப்படவுள்ளதாக அரசாங்கத்தால் அறிவித்தல் விடப்பட்டுள்ள நிலையில் அதற்கெதிராக மக்களை அணிதிரட்டிப்போராடப்போவதாக வடமாகாணசபை உறுப்பினர் விந்தன் கனகரட்ணம் எச்சரித்துள்ளார்.

மண்டைதீவுப் பகுதியில் கடற்படைமுகாம் அமைப்பதற்கு பொதுமக்களின் காணிகளை சுவீகரிக்கும் செயற்பாட்டை ஒரு போதும் அனுமதிக்க முடியாது. 
மண்டைதீவுப் பகுதியில் குடிமனைகள், வயல்காணிகள் மற்றும் தோட்ட நிலங்களை கடற்படையினர் கையகப்படுத்தியுள்ளனர். யாழ்ப்பாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் பொதுமக்களுடைய காணிகளை இராணுவத்தினர் அடாத்தாகப் பிடித்து வைத்துள்ளனர்.


பின்னர் அவற்றை சுவீகரிப்பதற்கு அதிகாரிகளின் உதவியை நாடுகின்றனர். வலுக்கட்டாயமாக செயற்பாடுகள் செய்யவைப்பதுமான தொடர் நடவடிக்கை குடாநாடு முழுவதும் இடம்பெற்று வருகின்றது. 

அதேபோன்று 1990ஆம் ஆண்டு தீவகத்தை ஆக்கிரமித்த கடற்படையினர், பல பொதுமக்களின் காணிகள், நிலங்களை அபகரித்து வைத்துள்ளார்கள். அத்துடன் பல கொலைகள் கடத்தல்களும் தீவகத்தில் அரங்கேறியுள்ளது. இன்றுவரை தமது இடத்தில் மீளகுடியேற முடியாமல் பொதுமக்கள் பல துன்பங்களை தற்போதும் அனுபவித்து வருகின்றார்கள்.

மண்டைதீவில் மட்டுமே 30 க்கும் மேற்பட்ட இளைஞர்கள் இராணுவத்தினராலும் ஒட்டுக்குழுக்களினாலும் பிடிக்கப்பட்டு இன்றுவரை தேடப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள். மண்டைதீவுப் பகுதியில் ஒரு அங்குல நிலத்தைக்கூட கடற்படையினருக்கு விட்டுக் கொடுப்பதற்கு நாம் இடமளிக்க மாட்டோம். அதிகாரிகளும் இந்த நடவடிக்கைகளுக்கு துணை போகக்கூடாது. காணி அளக்க முற்பட்டால் பொதுமக்களை அழைத்து போராட்டத்தை மேற்கொள்வோம்.

அனைவராலும் கைவிடப்பட்ட பகுதியாக மண்டைதீவு வனாந்தர பூமியாக தற்போது மாறியுள்ளது. தொழில் ஏதும் இன்றி அங்குள்ள மக்கள் நாளாந்தம் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றார்கள். இந்த நிலையில் மிஞ்சியுள்ள காணிகளை சுவீகரிப்பதற்கு நாம் விடமாட்டோம்.

இதை ஒரு எச்சரிக்கையாக சம்பந்தப்பட்டவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். இந்த செயற்பாடுகளை உடனடியாக நிறுத்தவேண்டும். அதை மீறி செயற்பட்டால் நிலஅளவை திணைக்களத்தை முற்றுகையிட்டு, பாரிய போராட்டத்தை முன்னெடுப்பதுடன் இந்த செயற்பாட்டை நிறுத்துவோம் என விந்தன் கனகரட்ணம் தெரிவித்துள்ளார்.

No comments