தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் - கலெக்டர் அறிவிப்பு


இரண்டு நாட்களாக ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட வேண்டும் என அங்கு மக்கள் போராட்டம் நடத்தி வரும் நிலையில், ஸ்டெர்லைட் ஆலை மூடப்படும் என்று தூத்துக்குடி கலெக்டராக பதவுயேற்றுள்ள சந்தீப் நந்தூரி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஸ்டெர்லை ஆலையை மூடக்கோரி நடைபெற்ற போராட்டத்தில் கலவரம் வெடித்து 13 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். பலர் காயமடைந்தனர். இதனால், தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் மற்றும் எஸ்பி அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டனர். இந்நிலையில் புதிதாக நியமிக்கப்பட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தூத்துக்குடியில் இயல்பு நிலையை கொண்டுவர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது... ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு முடிவு செய்திருக்கிறது. ஆலையை மூடவே மின்சாரம், குடிநீர் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் பலியாகியுள்ளனர். 19 பேர் படுகாயம், 83 பேர் காயம் அடைந்துள்ளனர். மேலும், வன்முறையில் 29 ஆண் காவலர்களும், 10 பெண் காவலர்களுக்கும் காயமடைந்துள்ளனர். ரூ.1.27 கோடி மதிப்பிலான 110 வாகனங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. ஆட்சியர் அலுவலகத்தில் மட்டும் ரூ.29 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளது. தூத்துக்குடியில் மீண்டும் இயல்பு நிலையை கொண்டுவருவதே தற்போதைய நோக்கமாக உள்ளது. இயல்பு நிலை திரும்ப மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

No comments