இனக்குரோதப் பேச்சுக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனை! - சிறுபான்மைக் கட்சிகள் கோரிக்கை


இனக் குரோதப் பேச்சுக்களுக்கு குற்றவியல் சட்டத்தின் மூலம் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று அரசாங்கத்திடம் சிறுபான்மைக் கட்சிகள் கோரிக்கை விடுத்துள்ளன.ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இது தொடர்பாக அரசாங்கத்திடம் இருந்து எழுத்துமூல உத்தரவாதமொன்றை எதிர்பார்ப்பதாக அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார். தற்போதைய நிலையில் அரசியலமைப்புக்கான திருத்தச் சட்டங்களை முன்வைக்க பல்வேறு தரப்புகளும் ஆர்வம் காட்டுகின்றன. எனினும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையைத் தொடர்தல், வடக்கு மற்றும் கிழக்குக்கு அரசியல் அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தல், இனவாதப் பேச்சுக்களுக்கு குற்றவியல் சட்டத்தின் கீழ் தண்டனை வழங்கல், மாகாண சபைத் தேர்தல்களை பழைய முறையில் நடத்துதல் ஆகிய கோரிக்கைகளை அரசாங்கத்தின் பங்காளியான சிறுபான்மைக் கட்சிகள் முன்வைத்துள்ளன.இது தொடர்பான எழுத்து மூல உத்தரவாதம் ஒன்றையும் குறித்த கட்சிகள் எதிர்பார்க்கும் நிலையில் இது தொடர்பான சந்திப்பொன்று இவ்வாரம் நடைபெறலாம் என்றும் தெரிய வருகின்றது.

No comments