சம்பந்தனுக்கு தமிழ் மக்கள் மீது அக்கறையில்லை - ஜி.எல்.பீரிஸ்

வடக்கு, கிழக்கு மக்களின் பிரதிநியாக இருந்துக்கொண்டு, அம்மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் அக்கறைகாட்டாத இரா.சம்பந்தனின் செயற்பாடுகளால் தான், கடந்த உள்ளூராட்சிமன்றத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வீழ்ச்சியடைந்ததாகவும் கூட்டமைப்புக்கான மக்கள் செல்வாக்கும், பாரியளவில் குறைந்துள்ளதாகக் குறிப்பிட்ட முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ், எதிர்க்கட்சிப் பதவியிலிருந்து, சம்பந்தன் விலக வேண்டுமென்றும் வலியுறுத்தினார்.

இரா.சம்பந்தன், இந்நாட்டின் எதிர்க்கட்சித் தலைவராக இருந்துக்கொண்டு,  பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவைப் பாதுகாத்து, அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயற்படுகின்றாரெனவும் குற்றஞ்சாட்டிய பீரிஸ், உலக நாடுகளிலுள்ள எந்தவொரு எதிர்க்கட்சித் தலைவரும், தங்கள் நாட்டு அரசாங்கத்துக்கு ஆதரவாகச் செயற்படுவதில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.

ஒன்றிணைந்த எதிரணியினால் நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பொன்று, இன்று (08), கொழும்பு - புஞ்சிபொரளையில் உள்ள வஜிராராம பௌத்த மத்திய நிலையத்தில் இடம்பெற்றது. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

No comments