வடக்கு முதலமைச்சர் - மூத்த போராளிகள் சந்திப்பு!

தமிழீழ விடுதலைப்புலிகளது மூத்த போராளிகள் மூவர் இன்று வடமாகாண முதலமைச்சரை சந்தித்து பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

முத்துக்குமார் மனோகர் ( பசீர் -காக்கா யாழ்ப்பாணம்), பாலிப்போடி சின்னத்துரை ( யோகன் - பாதர் மட்டக்களப்பு ) ஆத்மலிங்கம் ரவீந்திரா ( ரூபன் திருமலை) ஆகியோர் இன்று வடமாகாண முதலமைச்சரை சந்தித்திருந்தனர். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் உள்ளிட்ட நினைவேந்தல்களிற்கான பொது ஏற்பாட்டுக்குழுக்களை அமைப்பது உள்ளிட்ட விடயங்களை அவர்கள் முதலமைச்சருடன் உரையாடியதாக தெரியவருகின்றது.

முன்னதாக முதலமைச்சருடன் சந்திப்பொன்றை நடத்த திருமலை அரசியல்துறை பொறுப்பாளராக இருந்திருந்த எழிலனது மனைவியும் அமைச்சருமான அனந்தியை அவர்கள் அணுகியதாக தெரியவருகின்றது.

எனினும் அதனை அனந்தி கண்டுகொள்ளாதிருந்த நிலையில் யாழ்.ஊடக அமையத்திற்கு இவ்விடயத்தை சிலதரப்புக்கள் கவனத்திற்கு கொண்டுவந்திருந்தன.இதனையடுத்து முதலமைச்சரை சந்திக்க ஏற்பாடுகள் செய்துவழங்கப்பட்டிருந்தது.

இதனிடையே முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் தொடர்பில் தமது நிலைப்பாட்டை அவர்கள் அண்மையில் யாழ்.ஊடக அமையத்தில் ஊடகங்களின் முன்னர் வெளிப்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

No comments