வவுனியா நகரசபைத் தலைவர் மீது சிறிலங்கா சிறைக்காவலர் தாக்குதல் முயற்சி


வவுனியா நகரசபை தலைவரை சிறிலங்கா சிறைக்காவலர் ஒருவர் தாக்க முற்பட்டதாக  தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்று (29) காலை இடம்பெற்றதாகக் கூறப்படும்  குறித்த சம்பவம் தொடர்பில்
வவுனியா நகரசபை தலைவர் குறிப்பிட்டபோது,

“வவுனியா நீதிமன்றத்திற்கு பின்புறமாக சட்டத்தரணிகளின் வாகனங்களை நிறுத்துவதற்காக தரிப்பிடமொன்று புனரமைப்பு செய்யப்படவேண்டியுள்ளமையினால் குறித்த பகுதியை நகரசபை தலைவர் என்ற முறையில் நானும் செயலாளரும் நேரில் சென்று பார்வையிட்டிருந்தோம். விளக்கமறியல் சிறைச்சாலைக்கு செல்லும் பகுதியினூடாகவே இப்பகுதிக்கு செல்ல வேண்டிய தேவையுள்ளமையினால் நகரசபை வாகனத்தில் இப்பகுதியினூடாக சென்று பார்வையிட்டதன் பின்னர் வாகனத்தினை சாரதி பின்புறமாக செலுத்தி வந்தார். இதன்போது சிறைக்காவலர் ஒருவர் தொலைபேசியில் கதைத்தவாறு வாகனத்திற்கு அருகில் வந்தார். எனினும் சாரதி வாகனத்தை நிறுத்திவிட்டமையினால் விபத்து தவிர்க்கப்பட்டது.

இந் நிலையில் சிறைக்காவலர் நகரசபை சாரதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தார். இந் நிலையில் நான் வாகனத்தில் இருந்து இறங்கி சம்பவம் தொடர்பில் கேட்டபோது என்னை தாக்க முயற்சித்தார். எனினும் நான் நகரசபை தலைவர் என தெரிவித்த நிலையிலும் என்னுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதுடன் மீண்டும் மீண்டும் கைகளை உயர்த்தி தாக்க முற்பட்டிருந்தார். இதன் காரணமாக சிறைச்சாலை அதிகாரியொருவரிடம் முறையிட்ட நிலையில் அவர் எழுத்து மூலமாக முறைப்பாட்டை தருமாறு தெரிவித்தார். நகரசபை தலைவர் என்ற வகையிலும் உத்தியோகப்பற்றற்ற நீதிபதி என்ற வகையிலும் அவ்வாறு வழங்க வேண்டிய தேவை எனக்கில்லை என தெரிவித்து பொலிஸாரிடம் முறைப்பாட்டை பதிவு செய்ய சென்ற போது அவர்கள் முறைப்பாட்டை பதிவு செய்து விட்டு செல்லுங்கள் நடவடிக்கை எடுப்பது தொடர்பாக தமக்கு தெரியும் என நகரசபை தலைவர் என்ற பதவி நிலைக்கு அகௌரவப்படுத்தும் வகையில் கருத்துத் தெரிவித்தனர்” - என்றார்.

No comments