20 ஆவது திருத்த சட்ட மூலத்தை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறது ஜேவிபி!


நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிப்பது தொடர்பான 20 ஆவது திருத்த தனிநபர் சட்ட மூலத்தை இன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க இருப்பதாக ஜே.வி.பி அறிவித்துள்ளது. ஜே.வி.பி சார்பில் அதன் தலைவர் அநுர குமார திசனாயக்க இதனை பாராளுமன்ற செயலாளர் நாயகத்திடம் கையளிக்க இருப்பதாக ஜே.வி.பி பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க தெரவித்தார். இதேவேளை தனிநபர் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட்டு பல வாரங்கள் கழிந்தே அது விவாதத்திற்கு எடுக்கப்படும் என பாராளுமன்ற செயலாளர் நாயகம் அலுவலகம் தெரிவித்தது. தனிநபர் பிரேரணையொன்று சமர்ப்பிக்கப்பட்ட பின்னர் அது மூன்று மொழிகளிலும் மொழிபெயர்க்கப்படும். அதனையடுத்து பத்திரிகைகளில் விளம்பரமாக வெளியிடப்பட்டு இரு வாரங்களின் பின்னரே ஒழுங்குப் புத்தகத்தில் உள்வாங்கப்படும் என பிரதம பாராளுமன்ற செயலாளர் நாயகம் நீல் இத்தவெல தெரிவித்தார். அதன் பின்னர் துறைசார் மேற்பார்வை குழுவில் அது தொடர்பில் ஆராயப்பட்ட பின்னர் சட்டமா அதிபரின் ஆலோசனை பெறப்படும்.இது தவிர குறித்த தனிநபர் சட்ட மூலம் தொடர்பாக அமைச்சின் அறிக்கையும் பெறப்படும். இதுபோன்ற நீண்ட செயற்பாடுகளின் பின்னரே விவாதத்திற்கு எடுக்கப்படுவது தொடர்பில் முடிவு செய்யப்படும். இதேவேளை 20 ஆவது தனிநபர் சட்டத்தின் மூலம் நிறைவேற்று ஜனாதிபதியின் அதிகாரம் நீக்கப்பட்டு பிரதமரின் அதிகாரத்தை அதிகரிக்கவும் பாராளுமன்றத்தினூடாக ஜனாதிபதியை தெரிவு செய்யவும் பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்த பிரேரணை தொடர்பில் அரசியல் கட்சிகளிடையே மாறுபட்ட கருத்துகள் நிழவுகிறது. பாராளுமன்றத்தை கலைக்கும் யோசனையை இதில் உள்ளடக்கினால் ஆதரிக்க தயார் என ஒன்றிணைந்த எதிரணி அறிவித்துள்ளது. சிறுபான்மை கட்சிகள் இந்த சட்ட மூலத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

No comments