அரசாங்கத்திலிருந்து விலகிய16 பேரும் இன்று மஹிந்தவுடன் சந்திப்பு


தேசிய அரசாங்கத்திலிருந்து விலகிய 16 ஸ்ரீ ல.சு.கட்சியின் உறுப்பினர்களும் இன்று (23) மாலை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து பேச்சுவார்த்தை நடாத்தவுள்ளனர். தற்போதைய அரசாங்கம் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சியினர் கூட அதிருப்தியில் உள்ளதாகவும் மிகவிரைவில் முற்போக்கு சக்தியொன்றை உருவாக்கி அனைவரும் ஒன்றிணைந்து இந்த அரசாங்கத்தை வீழ்த்துவதற்கும், புதிய அரசாங்கம் ஒன்றை உருவாக்கவும் நடவடிக்கை எடுக்கப் போவதாகவும் முன்னாள் அமைச்சர் எஸ்.பீ. திஸாநாயக்க எம்.பீ. கூறியுள்ளார். அத்துடன், 16 பேர் கொண்ட குழுவும் கூட்டு எதிரணியிலுள்ள தினேஷ் குணவர்த, வாசுதேவ நாநயக்கார, விமல் வீரவங்ச, உதய கம்மம்பில போன்ற கட்சித் தலைவர்களைச் சந்திக்கவுள்ளதாகவும் எஸ்.பி. திஸாநாயக்க எம்.பி. குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, எந்தக் கட்சியாக இருந்தாலும் பொதுஜன பெரமுனவின் கீழ் ஒன்றுபட்டால் மாத்திரமே அவர்களுக்கு மஹிந்த ராஜபக்ஷவின் கீழ் ஒன்றிணைய முடியும் என பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியுடன் மஹிந்த ராஜபக்ஷவையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியில் உள்ளோரையும் ஒன்று சேர்க்க வேண்டும் என்ற நோக்கிலேயே 16 பேரும் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையின் கீழ் ஸ்ரீ ல.சு.க.யில் இருப்பதாகவும் 16 பேரும் குறிப்பிட்டுள்ளனர். மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தை ஏற்றால், மைத்திரியின் தலைமைத்துவத்திலிருந்து நீங்கியவராக கருதப்படும் எனவும் பேராசிரியர் ஜி.எல். உறுதியாகவே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

No comments